Monday, March 17, 2025
Huis Blog Bladsy 2

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

0

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பதில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பரீட்சார்த்திகளுக்காக இன்று (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென்று பதில் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். எஸ்.பீ. சூரியபெரும தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்தியாக இருந்தால், அவர்களுக்காக தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதத்தை வெளியிடுவதற்காக மாத்திரம் இன்று சனிக்கிழமை ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் திறந்திருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கோரிக்கை முன்வைக்காத இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினூடாக உறுதிப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கை பத்திரத்தை எடுத்து வர வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு..!

0

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.

சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம் பெற்றுள்ளதாகவும் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை மறுப்பு; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

0

இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவானது நேற்று (14) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு, மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் போது, சமூக மட்டத்தில் இவரது செயற்பாடுகள் சர்ச்சைக்குரிய நிலையிலும் பல குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாலும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யூடியூப்பர் கிருஷ்ணா தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

NPP அரசாங்கம் விலகி பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்..!

0

இந்த அரசாங்கம் இராஜினாமா செய்து பொதுஜன பெரமுனவிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

ஊடகங்களுக்குப் பேசிய அவர், சமீப நாட்களாக அமைதியாக இருந்தமையானது நாமல் ராஜபக்ஷவுடன் கிராமம் கிராமமாகச் சென்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் நினைவு கூர்ந்தார்.

இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்று தான் நம்புவதாகவும், மஹிந்த ராஜபக்ஷ முகாமின் அடுத்த தலைவராக எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ஷவுடன் பயணிக்க விரும்புவதாகவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியுடன் நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், அவர்கள் மீது தவறான முத்திரைகள் ஒட்டப்பட்டு, அவர்களை திருடர்கள் என்று குற்றம் சாட்டியதே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.

“கடந்த காலகட்டத்தில், நாங்கள் அமைதியாக மாவட்டங்களுக்குச் சென்று, கிராமம் கிராமமாகத் திட்டத்திற்குச் சென்று, நாமல் ராஜபக்ஷவுடன் இந்த தீவிர அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.” இந்த நாட்டின் அடுத்த தலைவர் நிச்சயமாக நாமல் ராஜபக்ஷ தான் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்களும் அப்போதே அப்படித்தான் சொன்னோம்.

நாட்டு மக்கள் தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகளையும், தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் புரிந்து கொள்கிறார்கள். எனவே, இந்த நாட்டிற்காக உழைத்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

இந்த நாட்டில் போரை நிறுத்திய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார். எனவே, மஹிந்த ராஜபக்ஷ முகாமின் அடுத்த தலைவராக இளைஞர் தலைவர் நாமல் ராஜபக்ஷவை வைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

“இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்குவதற்கான எங்கள் திட்டம் இந்தத் தேர்தலிலிருந்தே உருவாகிறது” அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் அடி மட்டத்திலிருந்து தயார் செய்து வருகிறோம் என்றார்.

கிழக்கு பல்கலை மாணவர்களுக்கிடையே மோதல்; ஒருவர் வைத்திய சாலையில் அனுமதி..!

0

கிழக்கு பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வரும் நான்கு மாணவர்களுக்கிடையே வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதையடுத்து ஒரு மாணவன் காயமடைந்துள்ளார். இதையடுத்து, காயமடைந்த மாணவன் ஏறாசவூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், காயமடைந்த மாணவன் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாடளித்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமது பாதுகாப்பை வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் கிராம அலுவலர்கள்..!

0

கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி தொழிற் சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களினால் இந்த தொழில்சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் எனவும், பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக பெண் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், 13ம் திகதி முதல் இரவு நேர அனர்த்தங்கள், உயிரிழப்புகள் உட்பட சகல கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

நாளை முதல் வாரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் தங்கும் மூன்று நாட்களிலும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை மட்டுமே (களப்பணிகளுக்கு உட்பட்டு) அலுவலகத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே முறைப்படி, காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும், ஆனால், மாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும் பெண் அதிகாரிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் திரு.நெவில் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் இருந்து இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் கைது..!

0

பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.

இவர்கள் பிரான்சில் இருந்து இந்தியா சென்று கடல் மூலம் இலங்கை செல்ல முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் அரசியல் தஞ்ச உரிமை பெற்ற ஒருவரால் இலங்கைக்கு செல்ல முடியாது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆசிரியரை குடையும் TID; மாணவர்களின் விபரங்களை வழங்க மறுப்பு..!

0

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளனர்.

கடந்த வருடம் கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பில், பாடசாலையின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவினரால் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சுமார் 8 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம் இருந்து 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வாய்மூலமாகப் பெறப்பட்ட பதில் தொடர்பில் மேலும் விசாரிப்பதற்காக 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01 இல் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் மாவட்ட இணைப்பாளர் டி.கனகராஜுக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவரது தலையீட்டினை அடுத்து, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், பரந்தன் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆசிரியருக்கு வாய்ப்பளித்தனர்.

பெண் மருத்துவர் துஸ்பிரயோகம்; அச்சத்தில் அனுராதபுர வைத்திய சாலை ஊழியர்கள்..!

0

அனுராதபுரம் போதனா வைத்திய சாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற் சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட வைத்தியர்கள் குழு முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டதை கைவிடுமாறும் சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

36 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை நாங்கள் கைது செய்தோம். ஐந்து பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. சந்தேக நபர் இருக்கும் பகுதி தொடர்பில் நேற்றிரவு எனக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து இப்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஒரு அரசாங்கமாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிடம் கோரிக்கையை வைத்தோம். தயவுசெய்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என கோரினோம்.

ஊடகங்களும் அந்தப் பொறுப்பை அதே வழியில் நிறைவேற்றின. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எந்த ஊடகமும் அந்நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை. அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று காலை நான் அனுராதபுரம் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தேன். இந்த சம்பவத்தால் அங்குள்ள ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பு சேவையில் குறைபாடுகள் உள்ளன. அதைப் பற்றியும் கலந்துரையாடினோம்” என்றார்.

யாழிலும் இலங்கை தமிழரசு கட்சி பிளவு; உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்..!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்திலும் முன்னாள் தவிசாளர் ஒருவர் தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து மாற்று கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன்படி காரைநகர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் காரைநகரின் அபிவிருத்திக்காக தம்முடன் கை கோர்ப்பார்கள் என தான் பலமாக நம்புவதாக குறிப்பிட்டார்.

பிரதேசசபையின் இறுதி 7 மாதங்கள் தான் தவிசாளராக இருந்து பல அதிரடி அபிவிருத்திகளை இனங் கண்டு செயற்படுத்தியமையை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள் என தாம் திடமாக நம்புவதாகவும். அவரது கட்சியினரின் சட்டப் புலமையை பயன்படுத்தி எதிர்கால காரைநகரின் நிலையான அபிவிருத்திக்கு முறையான திட்டங்களை வகுத்து செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!