வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும்.
ஆனால், “கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?” என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது.
இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே.
வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும். இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது. யுத்தம் முடிவடைந்த 2010ல் கூட வடக்கு நான்காமிடத்தில் இருந்தது.
ஒரு மாணவன் சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொறுப்பானவர்கள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே.
அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும் போது அதன் பொறுப்பு யாருடையது? அதன் முழுப் பொறுப்பும் வலய, மகாண பணி்பாளர்கள் மட்டுமன்றி மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரையே சாரும் எனினும் மாகாண சபை இயங்காத நிலையில் அந்தந்த மாகாணங்களின் செயலாளரே முழுமைக்கும் பொறுப்பாளியாவார்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே.
வடக்கிலுள்ள மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாடசாலைகளை விலக்கி, மாகாணப் பாடசாலைகளை கணக்கிட்டால் வடக்கின் கல்வியின் வீழ்ச்சியின் உண்மை முகம் தெரியும்.
இந்த நிலையில் மாகாண சபை முறை என்ற ஒன்றினை உருவாக்கி அதிகாரிகளுக்கு இருக்கக் கதிரையும் 25ம் திகதி குளிரூட்டிக்குள் இருந்தபடி சம்பளம், வாகன பெர்மிட், வெளிநாட்டு சுற்றுலா போன்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டுமா மாகாண சபை முறை? இது எமக்கு தேவையற்ற சுமையாகவே காணப்படுகின்றது.
குறிப்பாக வடக்கில் பொருத்தமற்ற வெளிப்படையற்ற பழிவாங்கல் இடமாற்றங்கள், பழிவாங்கல்கள், அதீத அழுத்தம், அதிகார துஸ்பிரயோகம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மாலைக்கும், பொன்னாடைக்கும் ஆசைப்படும் அதிகாரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சூழலில் எவ்வாறு வினைத்திறனையும், விளைதிறனையும் எதிர்பார்க்க முடியும்?
” குயிலைப் பிடித்து கூண்டில் அடை்த்து கூவச் சொல்கிறது கல்விப் புலம் ” அது எவ்வாறு கூவும்?
வடக்கின் கல்வியின் அதிபாதாள நிலைக்கு காரணமான அதிகாரிகள் தாமே தமது தவறினை ஏற்று பதவி விலகுவார்களா அல்லது ஆளுநர் பதவி நீக்கம் செய்வாரா? என்பதே மக்களின் முன்னுள்ள வினா.