ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மித்தெனியவில் உள்ள தனிநபர் காணியொன்றில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், இரசாயனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தொடர்பு பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
சுமார் 50 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய இரசாயன பொருட்கள் தற்போது குறித்த பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மேவினால் இறக்குமதி செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கெஹெல்பத்தர பத்மே நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு பாகிஸ்தானியர்களின் உதவியுடன் ஐஸ் போதைப்பொருளை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
“பெக்கோ சமன்” என்று அழைக்கப்படும் சந்தேக நபரொருவரின் விசாரணையில் இருந்து பெறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, குறித்த சோதனை நடவடிக்கைகள், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.
அங்குணுகொல பெலஸ்ஸவைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் இந்த இரசாயனங்களை மறைத்ததற்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.