Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 2

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய சாரணர்களிற்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..!

0

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய சாரணர்களிற்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது பாடசாலையின் குழு சாரணத் தலைவரும் அதிபருமான திரு.சண்முகம் தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின் சாரண பொறுப்பாசிரியர் கு.சஜிந்தன் ஆகியோரின் பயிற்சியில் 34 சாரணர்களுக்கு சிறப்பான முறையில் சின்னம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அனுரவின் யாழ் விஜயம்; விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதாக கூறுவது பொய்..!

0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனவரி 31 யாழ்ப்பாணப் பகுதிக்கு விஜயம் செய்ய இலங்கை விமானப் படைக்கு சொந்தமான மூன்று விமானங்களை பயன்படுத்தியதாக பொய்யான செய்திகள் தற்போது சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றன.

எவ்வாறாயினும், இந்த பயணத்திற்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எந்த விமானமும் பயன்படுத்தப் படவில்லை என்றும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ காரில் பயணித்தார் என்றும், இது தொடர்பாக சமூக வலை தளங்களில் பரவி வரும் தகவல்கள் முழுமையாக பொய்யானது என இலங்கை விமானப் படை தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மஹிந்தவை தோளில் சுமக்க முடியாது – எரங்க குணசேகர

0

போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவை தோளில் சுமந்துக் கொண்டிருக்க முடியாது. கௌரவம் என்பதொன்று இருக்குமாயின் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொலன்னாவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற ரீதியில் பொருளாதார மட்டத்தில் மாத்திரம் வங்குரோத்து நிலையடையவில்லை. சமூக கட்டமைப்பிலும் வங்குரோத்து நிலையடைந்துள்ளோம். சிறந்த முன்னேற்றத்துக்காகவே கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சகல அமைச்சுகளுக்கும் கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்படும். அத்துடன் மக்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும். சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுக் கொடுப்போம்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவுகள் இயலுமான வகையில் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு உட்பட செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, வழங்கப்பட்ட அரச இல்லங்களை மீளப்பெறுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் நாகரீகமான முறையில் அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்றும் அரச இல்லங்களில் தான் உள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்தார் என்பதற்காக அவரை தோளில் சுமந்துக்கொண்டு திரிய முடியாது. அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். தமது பெற்றோரை பிள்ளைகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவை பார்த்துக் கொள்வதற்கு அவரது மூன்று பிள்ளைகளுக்கும் முடியாவிடின் அவருக்கும், அவரது பாரியாருக்கும் வீடு வழங்கலாம். ஆனால் அவரது மூன்று பிள்ளைகளையும் அரசாங்கத்தால் பராமரிக்க முடியாது என்றார்.

ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – அனுர

0

ஆட்சியாளர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையேல் ஒழுக்கமற்ற நாடே உருவாகும். ஒழுக்கமான நாட்டை கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நான் சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன். எனது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள். நாம் ஒருபோதும் சட்டத்துக்கு மேல் செயல்பட மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

குருநாகலில் சனிக்கிழமை (1) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தாஜுதீன் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இவை அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் இல்லை.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி லசந்த கொலை செய்யப்பட்டார். 16 வருடங்கள் கடந்துள்ளன. பொலிஸ் திணைக்களத்தால் கண்டு பிடிக்காமல் போயுள்ளதா? இல்லை. எமது பொலிஸ் திணைக்களத்தில் திறமையான அதிகாரிகளே உள்ளனர். எந்தவொரு சர்ச்சைக்குரிய குற்றங்களாக இருந்தாலும் அதனை பொலிஸ் திணைக்களம் கண்டு பிடிக்கிறது.

ஆனால் லசந்த தாஜுதீன் தொடர்பில் உண்மைகளை அறிய முடியாமல் போயுள்ளது. எக்னெலிகொட உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டார்கள்.அவர்களை அரசாங்கமே தாக்கியது. அதுவே உண்மை.குற்றவாளிகள் அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற்றனர். இது தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். குற்றங்களை செய்து விட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே இருக்க முடியுமானால் அரசாங்கம் இருந்து என்ன பயன்? அதிகார பலம் உள்ளவர்கள் சட்டத்துக்கு அஞ்சுவதில்லை. சட்டத்தை மதிப்பதில்லை. ஒரு பிள்ளையிடம் அரசாங்கம் 7 துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளது.பாதுகாப்பையும் வழங்கியுள்ளனனர்.

ஆட்சியாளர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அவ்வாறு சட்டத்துக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒழுக்கமற்ற நாடே உருவாகும்.ஒழுக்கமான நாட்டை கட்டியெழுப்புவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நான் சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன். எனது அமைச்சர்கள் சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள். எனது பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள். நாம் சட்டத்துக்கு மேல் செயல்படமாட்டோம் . எமக்கு அத்தகைய நாடு கிடைக்கவில்லை. ஆனால் எமது சந்ததிக்காவது அத்தகைய நாடு கிடைக்க வேண்டும் என்றார்.

பெளத்தர் இல்லாத இடத்தில் தையிட்டி விகாரை; அயலிலுள்ள காணியையும் வழங்க வேண்டும்..!

0

யாழ் – காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என வடமாகாண ஆளுநர் நா, வேதநாயகன் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் , காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன் போது சமர்ப்பித்திருந்தனர்.

திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.

விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்தி வருகின்றார்.

அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திஸ்ஸ விகாரையை அகற்றி, அந்த காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்த போது, ஆளுநர் குறித்த காணி உரிமையாளர்கள் மாற்று காணியை கேட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அதனை தெளிவு படுத்தும் முகமாக ஆளுநர் குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்து செய்யப்பட்ட முடிவு: அரச நிறுவனங்களுக்கு வெளியாகிய அறிவிப்பு..!

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களில் கட்டிடங்களை மின்சாரத்தால் அலங்கரிப்பது தொடர்பான சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாட்டை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, மின் விளக்குகளால் கட்டிடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் 162 வெற்றிடங்கள் – அரச அதிபர்

0

யாழ் .மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய தமது நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (31.01.2025) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

யாழ், மாவட்டம் செயலகம் உற்பட அதன் கீழ் இயங்கும் 15 பிரதேச செயலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு குறைவாக பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது.

நிர்வாக கிராம உத்தியோகத்தர் 06, கிராம உத்தியோத்தர்கள் 65, முகாமைத்துவ உதவியாளர்கள் 27, அலுவலக உதவியாளர்கள் 45, சாரதிகள் 12 மற்றும் மாவட்ட பதிவாளர் தின களத்தில் 08 பேர் உள்ளடங்களாக 162 ஆளணியினர் தேவைப்பாடு இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விடயத்திற்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி விரைவில் முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்..!

0

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும்.

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பாலியல் நோய்கள் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை

0

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர்.

இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்றார்.

பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளாரா அர்ச்சுனா எம்.பி; வெளியாகிய தகவல்..!

0

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 14 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இதற்கிடையில், நிலுவையில் உள்ள ஒழுக்காற்று விசாரணை காரணமாக இராமநாதன் அர்ச்சுனா சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் சார்பாக ஆஜரான மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி மாயாதுன்னே கொரியா மற்றும் நீதிபதி மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர் கோரியபடி அறிவிப்புகள் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குவதை பரிசீலிக்க மனுவை மே 14 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியது.

இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்கும் குவோ வாரண்டோ ரிட் வகையிலான உத்தரவை பிறப்பிக்கக் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி என்.கே.அசோக்பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆஜராகினர், துஷாரி ஜெயவர்தனாவின் அறிவுறுத்தலின் பேரில் மூத்த சட்டத்தரணி சேனானி தயாரத்ன இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரானார்.

அர்ச்சுனா சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும், எனவே, ஒரு பொது அதிகாரியாக, அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் கூறினார்.

அரசியலமைப்பின் பிரிவு 91(1)(e) பொது ஒப்பந்தங்களில் ஏதேனும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கிறது என்று மனுதாரர் கூறினார்.

அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றினார் என்றும், பின்னர் பேராதனை போதனா மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டார் என்றும் மனுதாரர் மேலும் கூறினார்.

செப்டம்பர் 29, 2024 அன்று அல்லது அதற்கு முந்தைய திகதியில் அர்ச்சுனாவின் பேஸ்புக் சுயவிவரம், அப்போதைய சுகாதார அமைச்சக செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக மனுதாரர் கூறினார்.

எனவே, அரசியலமைப்பின் பிரிவு 91(1)(d) மற்றும் 91(1)(e) ஆகியவற்றின் கீழ் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று மனுதாரர் கூறினார்.

error: Content is protected !!