முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் 7 வழக்குகளையும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் சுனில் வட்டகல இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ”மேன்முறையீட்டு நீதிமன்றம் 7 வழக்குகளுக்கு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அந்த 7 வழக்குகளின் தீர்ப்புகளிலும் பிரதிவாதியாக இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆவார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளரின் கையொப்பம் இல்லை என்று கூறி, மேல் நீதிமன்றம் அந்த 7 வழக்குகளின் தீர்ப்புகளையும் நிராகரித்திருந்தது.

அதாவது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த அரசாங்க காலத்தில் அவ்வாறே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேன்முறையீடு செய்தது. அதற்கான தீர்ப்பே இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் 7 வழக்குகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே இவர்கள் பதற்றமடையத்தானே வேண்டும்? அதனாலே நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு விடயம் தொடர்பில், இவர்கள் கூட்டிணைந்த எதிர்க்கட்சியில் இருந்தவாறு இப்போது இவற்றைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
45 நிமிடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்பு எமது கைக்கு எவ்வாறு வந்தது? என்று சிந்தித்து பாருங்கள், இப்போது நீதிமன்றம் திறம்படச் தொழிற்படுகிறது. வழங்கப்படும் தீர்ப்புகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்படுகிறது. விரும்பிய எவரும் தீர்ப்பைப் பார்த்துக் கொள்ள முடியும்.
இன்று ஒருவருக்கு வீட்டிலிருந்தபடியே ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். அனைத்து பதிவுகளையும் வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ள முடியும்.” என்று கூறினார்.


Recent Comments