Sunday, February 8, 2026
Huis Blog

மக்களின் எதிர்ப்பையும் மீறி கிவுல் ஓயா திட்டம்; அரசின் அவசர நகர்வு..!

0

வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அந்த திட்டம் சம்பந்தமாக நாளை திங்கட்கிழமை (09) மணலாறில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளுராட்சி மன்றங்களினுடைய பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது கொழும்பிலிருந்து வருகைதரவுள்ள மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் தரப்பினர்களுக்கு காணப்படும் சந்தேகங்களுக்கான பதிலளிப்புக்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயாத் திட்டம் சம்பந்தமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளும் மிகத்தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினை அடுத்து, கிவுல் ஓயாத் திட்டத்தினை முன்னெடுப்பதால் காணப்படுகின்ற பிரச்சினைகளை கண்டறியும் முகமாகவே குறித்த கள ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் குறித்த திட்டத்துக்கான அங்கீகாரத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியிருந்த நிலையில் அத்திட்டம் சம்பந்தமாக அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை.

எனினும் தற்போது மக்கள் எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் கள ஆய்வுப் பணிகளை அவசரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தவின் பங்கேற்புடன் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாவட்டச் செயலகத்தில் கிவுல் ஓயாத் திட்டம் சம்பந்தமாக இறுதியான கூட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

நிர்ணய விலையில் நெல் கொள்வனவு இல்லை; விவசாயிகளுக்கு செய்யும் பாரிய துரோகம்..!

0

அரசாங்கம் நிர்ணய விலையில் இன்னும் நெல் கொள்வனவு செய்யவில்லை, இது விவசாயிகளுக்கு செய்யும் பாரிய அநியாயமாகுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழும், அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவின்கீழும் வீசேட தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்ற விவாதத்திலே கடந்த 06.02.2025 கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எங்களுடைய பிரதேசத்திலே இப்போது 65 வீதத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் அறுவடை செய்யப்பட்டு முடிந்துவிட்டது.

ஆனால் இந்த அரசாங்கத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை விலை நிர்ணயத்தை செய்து இன்றுவரை எங்களுடைய மாவட்டத்திலே நிர்ணயித்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யவில்லை. அரசின் ஆகக் குறைந்த கொள்வனவு விலை 120 ரூபா.

ஆனால் எங்களுடைய மாவட்டத்தில் 80 ரூபாய்க்கு கொள்வனவு செய்கிறார்கள். இது ஒரு பாரிய அநியாயம். ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயி கிட்டத்தட்ட 30,000 ரூபாவை இந்த கொள்வனவினூடாக இழக்கின்றார்கள்.

இந்த அனர்த்தத்தாலே அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று நான் நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவரோடு பேசிய போது அவர் கூறினார்,

அடுத்த திங்கட் கிழமையில் இருந்து கொள்வனவு செய்ய இருப்பதாக சொன்னார். 70 வீதம், 75 வீதமான விவசாய நடவடிக்கைகள் நிறைவுபெற்ற பின்னர் இனி யாரிடம் கொள்வனவு செய்ய போகின்றீர்கள். இதுதான் கடந்த வருடமும் நடந்தது.

ஆகவே தயவு செய்து இந்த நெல் கொள்வனவை இப்போதாவது, மிகுதியாக இருக்கின்ற 30 வீதமான விவசாயிகளாவது பயனடையக் கூடிய வகையில் நீங்கள் செய்ய வேண்டும்.

அடுத்த வருடத்திலாவது எங்களுடைய பிரதேசத்தில் அறுவடை நடைபெறுகின்ற போது அந்த நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் சிறுவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு – அமைச்சர் அதிர்ச்சி

0

பதுளை மாவட்டத்தில் இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த நிலைமைகளை எதிர்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முறையான இடவசதிகள் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பதுளை மாவட்டத்தில் இணையவழி வன்முறைகள் அதிகரித்துள்ளதோடு, பெற்றோர்களால் பிள்ளைகள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகமாக பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கையில் அதிகளவான சிறுவர் தொடர்புடைய குற்றங்கள் பொலன்னறுவையின் வெலிக்கந்தை பகுதியில் இடம்பெறுவதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார்.

கணனி சார்ந்த குற்றங்களை விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு..!

0

கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகின்றன. கடந்த காலங்களை விட தற்போது கணிசமான அளவு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன

எனவே, இந்தக் குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் பொலிஸ் சேவையை மிகவும் சிறந்த, வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் கட்டணம் அதிகரிப்பு..!

0

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்த கட்டணமாக தபால் கட்டணங்கள் 70 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்படுவதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவசரகால சட்டம் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்பட மாட்டாது – ஜனாதிபதி

0

மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும் அது ஒருபோதும் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி – நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டிட்வா சூறாவளியால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களின் மீள்குடியமர்த்துவதற்காக காணி வழங்குதல் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோசமாக இனவாதம் மாறிவிட்டது. வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது.

நமது மிகப்பாரிய பலம் ஒற்றுமை என்றும், நமது நாட்டின் முக்கிய பலம் நாம் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது என்றும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும்.

கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

நமது அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு அரசியல் மேடையிலும் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதே முக்கிய தலைப்பாக இருந்தது. முன்னாள் தலைவர்கள் அதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதன்படி, நமது நாட்டில் அரசாங்கங்கள் மாறியபோது, மோசடி மற்றும் ஊழல் ஒரு முக்கிய தலைப்பாக மாறியது.

நமது நாட்டின் அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் மோசடி மற்றும் ஊழல் பற்றிய ஒரு முழக்கம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

மேலும், இந்நாட்டின் அரசியல் மேடையில் ஜனநாயகம் ஒரு முக்கிய தலைப்பாக மாறிவிட்டது. தேர்தல்களை ஒத்தி வைப்பது, பத்திரிகையாளர்களைக் கொல்வது, வீதிகளில் இடம்பெறும் கொலைகள் பற்றிப் பேசப்பட்டது.

இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாது. அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகம் பற்றிய முழக்கத்தை எழுப்ப வாய்ப்பு இருக்காது.

மேலும், அரசியல் மேடைகளில் பொருளாதார வீழ்சிச பற்றி தொடர்ந்து பேசப்பட்டது.

நமக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகள் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது பற்றிய முழக்கங்களை அரசியல் மேடையில் முன்வைக்க வாய்ப்பு இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம்; பழிவாங்கும் பிரதி அமைச்சர்..!

0

கிபுல் ஓயாத் திட்டத்தை நிறுத்தக்கோரி இடம்பெற்ற போராட்டத்திற்கு பழி வாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிபுல் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் நான் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.

அந்த கூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்ற போது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கேட்ட போது, இதுவே நடைமுறை என கூறினார். வழமையாக கூட்டம் இடம்பெறும் போது எனக்கு வழங்கப்பட்டு வந்த இடத்திலேயே நான் அமரச் சென்றேன்.

அத்துடன் கூட்டம் ஆரம்பிக்க முன்னரே தமிழ்மொழி பெயர்ப்பு தேவை என்பதை பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

எனவே, என்னை அவமதிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்ப்பாட்டை மேற்கொள்கிறீர்கள் என ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

மக்களின் பிரச்சனைகளை அறிவதற்காக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோதும் மக்கள் பிரதிநிதி என்று பாராமல் அவர்கள் அவமதித்துள்ளனர். இதனால் இக்கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறி விட்டேன்.

இது ஒரு அநீதியான பழிவாங்கும் செயற்ப்பாடு. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். எமக்கு இந்த கதிரை முக்கியம் அல்ல.

கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவே எனக்கான இருப்பிடம் மறுக்கப்பட்டதற்கான காரணமாக உள்ளது. ஆனால் என்ன நடந்தாலும் கிபுல் ஒயாத்திட்டம் நிறுத்தப்படும் வரை எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும்.

எங்களது எதிர்ப்பை தொடர்ச்சியாகவே நாங்கள் காட்டுவோம். எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்றார்.

இன்றைய இராசிபலன் (06.02.2026)

0

மேஷம்

அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
பரணி: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
கார்த்திகை 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். வேலையில் கவனம் தேவை.
ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம், பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
திருவாதிரை: தொழில், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நன்மையாகும்.
புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் வேலைப்பளு கூடும். நண்பர்கள் உதவியாக இருப்பர்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
பூசம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும்.
ஆயில்யம்: சகோதரர் உதவியால் உங்கள் வேலைகள் முடியும். நெருக்கடி நீங்கும்.

சிம்மம்

மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபார பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
பூரம்: தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். கடன் பிரச்னை குறையும்.
உத்திரம் 1: பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதி உண்டாகும்.
சித்திரை 1,2: முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்னைகளுக்கு நீங்கள் முன்நின்று தீர்வு காண்பீர்.

துலாம்

சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
சுவாதி: செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.
விசாகம் 1,2,3: மனக்கவலை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
அனுஷம்: உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.
பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
அவிட்டம் 1,2: எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நன்மையாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
சதயம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வேலையில் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: மனதில் குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.
ரேவதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்

இளங்குமரனை விடாது துரத்தும் சுமந்திரன்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்..!

0

யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையான வழக்கு ஒன்று தொடர்பில், நீதிமன்றுக்கு வெளியில் வெளியிட்ட பகிரங்கக் கருத்து மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இழைத்தார் என்று தெரிவித்து, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால், எதிர் மனுதாரரான இளங்குமரன் எம்.பி. இந்தியா செல்கின்றமையால் வழக்கைப் பிறிதொரு நாளுக்கு ஒத்தி வைக்குமாறு அவர் ஏற்கனவே மனு செய்திருந்தார்.

அதன் அடிப்படையில், வழக்கைப் பிறிதொரு திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து – உயர் நீதிமன்றம் அனுமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்” எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய ஓய்வூதியச் சட்டம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும், புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை உறுதிப் படுத்துவதாகவும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.

இந்தச் சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய முறைமையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இது தொடர்பான தமது வியாக்கியானத்தை இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.

அதற்கமையவே இந்த வியாக்கியானம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெற்று வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!