Saturday, July 18, 2026
Huis Blog

கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம்; சிறீதரன் மற்றும் ரவிகரன் எம்.பிகள் பங்கேற்பு..!

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப் பிலவு கிராம மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக 18.07.2026 இன்று தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் தமது போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் சாத்தியம்???

0

எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அதன் தலைவர் ஜனக ராஜகருணா தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலைகள் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன.

இன்று காலை நிலவரப்படி பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 85 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

அமெரிக்க WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் நாட்டுக்குப் பெற்றோலிய உற்பத்திகளைக் கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை.

எனினும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள் சவாலாக அமைந்துள்ளாதாகவும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த மாத இறுதியில் மக்களுக்கு பாரிய நன்மைகளை வழங்க எதிர்பார்த்ததாகவும் தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைய அந்த நிலைமை சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாகினும் எதிர்வரும் 15 நாட்களில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையிலேயே அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.

முத்துராஜவெலவில் புதிய எண்ணெய் களஞ்சிய தாங்கிகள் மற்றும் குழாய்கள் நிர்மாணம்..!

0

முத்துராஜவெல பிரதேசத்தில் மேலும் 7 எண்ணெய் களஞ்சியப்படுத்தல் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவற்றில் 4 தாங்கிகள் விமான எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.

பெற்றோலிய விநியோகம் மற்றும் களஞ்சியப்படுத்தல் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த களஞ்சியத் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

முத்துராஜவெலயில் 3 தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான விலைமனுக்களைக் கோரும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இரு களஞ்சிய தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை,அடுத்த மாத இறுதியளவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக முத்துராஜவெலயில் இருந்து கட்டுநாயக்க வரை எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக 21 கிலோமீற்றர் நீளமான குழாய் மார்க்கமொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுக வளாகத்திலிருந்து கொலன்னாவை வரை எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் மார்க்கமொன்றை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.

இந்த திட்டங்களின் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் மேம்படுத்தப்படுமென அவர் கூறினார்.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை 2 மடங்காக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலைகள் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன.

இன்று காலை நிலவரப்படி பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 85 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

அமெரிக்க WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் நாட்டுக்குப் பெற்றோலிய உற்பத்திகளைக் கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள் சவாலாக அமைந்துள்ளாதாக அவர் கூறினார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த மாத இறுதியில் மக்களுக்கு பாரிய நன்மைகளை வழங்க எதிர்பார்க்கப் பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைய அந்த நிலைமை சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.

எதிர்வரும் 15 நாட்களில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையிலேயே அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுமென அவர் கூறினார்.

PTAல் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் பிணை..!

0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்கின்றி தடுத்து வைத்திருப்பது, அவரை விடுவிப்பதற்கான ஒரு “விதிவிலக்கான சூழ்நிலை” (exceptional circumstance) என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் (என்றழைக்கப்படும் தனுஷ்) என்பவருக்கே பிணை வழங்க மறுத்து கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ரத்து செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது 26 வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், அவர் தனது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதியினை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தே சிறையில் கழித்துள்ளார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த நபர் மீது, 2012 செப்டம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப் பத்திரிகையில் மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் (PTA கீழ் 115, அவசரகாலச் சட்டத்தின் கீழ் 115) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 106 அரசுத் தரப்பு சாட்சிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகள் வருமாறு:

1. ரூ. 200,000 ரொக்கப் பிணை. தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான நான்கு ஆள் பிணைகள்.

2. காவல்துறை தலைமையகத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும்.

3. பிரதிவாதியின் கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த பிணை நிபந்தனைகள் எதனையாவது மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 15B பிரிவை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இதன் மூலம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் நீதிமன்றங்களுக்கு பிணை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்த போது இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அவதானித்துள்ளது.

மேலும், இந்த நபர் கைது செய்யப்பட்ட போது அவரது மகளுக்கு ஒரு வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், இத்தனை ஆண்டு கால நீண்ட தடுப்புக்காவல் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரது பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்து தவித்துள்ளனர் என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான அஸ்திக தேவேந்திர மற்றும் அருண மதுசங்க ஆகியோர் முன்னிலையாகினர். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தார்.

வவுனியாவில் கோர விபத்து; பொலிஸ் சாஜன்ட் பரிதாபமாக பலி..!

0

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவிலிருந்து இரட்டைபெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜன்டான கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் சாவகச்சேரி நகரசபை புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்..!

0

யாழ் சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஞா.கிஷோர் சபையில் தான் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, மூன்றாவது தடவையாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 13.07.2026 அன்று நடைபெற்ற முந்தைய தவணை விசாரணையின் போது, எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கெடு விதித்திருந்தார். எனினும், குறித்த தினத்தில் ஆளுநர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பால் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டத்திற்கு இரண்டாம் எதிர்மனுதாரரான வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளமையை, முறையீட்டாளரின் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இரண்டாம் எதிர் மனுதாரரான உள்ளூராட்சி ஆணையாளருடன் அரச சட்டத்தரணி கலந்தாலோசித்தார்.

அதன் பின்னர், இவ்வழக்கின் விவாதம் நடைபெறும் நாள் வரை புதிய உப தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன்படி, எதிர்வரும் 21ம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வரும் 23ம் திகதிக்கு வழக்கை திகதியிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் இறுதி விவாதத்தை அடுத்த நாளான 24 அன்று நடத்துவதற்குத் திகதியிட்டுக் கட்டளையாக்கினார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல்; இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100% வரி..!

0

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, சுலோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதற்கான மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குக் கிடைக்கும் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு மூலமான நிதி ஆதாரத்தைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மேற்கூறிய 5 நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும்.

இந்த 5 நாடுகளும் வாங்கும் எண்ணெய்யின் அளவை 180 நாட்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து, அதற்கேற்ப வரிவிதிப்பை மாற்றியமைக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு மசோதா அதிகாரம் அளிக்கின்றது.

தங்களின் மொத்த தேவையில் 15% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த 100% வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது அணு உலைகளுக்காக ரஷ்யாவிடம் வாங்கும் யுரேனியத்திற்கும், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டுச் செயல்பாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், மற்றொரு நாட்டின் போர் முயற்சிகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளைத் தண்டிக்க, வரிவிதிப்பை ஒரு புவியரசியல் ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் மீட்கப்பட்ட விரல்..!

0

யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் விரல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 35ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நான் சண்டியன் அல்ல – இது அநுர அரசாங்கம்; மோசடிகளுக்கு இடமும் இல்லை..!

0

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு இன்று (17.07.2026) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கூட்டம் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத் தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியது.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான துல்லியமான தரவுகளைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

ஏனெனில், எதிர்வரும் ஆண்டில் எமது அரசாங்கம் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கவுள்ளது. மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் இந்த சமூகப் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களது பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம்.

என்னுடைய அமைச்சுப் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. தேசிய மக்கள் சக்தியினருக்கு மட்டுமன்றி, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதே எமது பிரதான நோக்கமாகும். அனைவரையும் அரவணைத்துக் கொண்டே எமது பயணம் தொடரும்.

நாட்டில் இன்று இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனச் சிலர் பேசுகின்றனர்.

எதிர்காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளை அலுவலகங்கள் மாவட்ட ரீதியில் திறக்கப்படவுள்ளன. எனவே, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்காலத்தில் நீங்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.

மக்களின் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும். இது அநுரகுமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை.

எமது ஜனாதிபதி குப்பி லாம்பு வெளிச்சத்தில் படித்து, வறுமை மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்தவர். அதனால்தான் ஏழை எளிய மக்களின் பக்கம் நின்று அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்.

அரசு அதிகாரிகளைக் கூடச் சுதந்திரமாக வேலை செய்யவிடாமல் இங்குள்ள சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர். ரணில் விக்கிரமசிங்க சிறைக் கம்பி எண்ணினார், மஹிந்த ராஜபக்ஷவும் கம்பி எண்ண வேண்டிய நிலை வரலாம். சட்டத்தை அமுல்படுத்தும் போது நாம் ஒரு போதும் தராதரம் பார்ப்பதில்லை” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே துறையில் இயந்திர நெருக்கடி; உடனடி நடவடிக்கை கோரும் நிலைய அதிபர்கள் சங்கம்..!

0

ரயில்வே திணைக்களத்தின் வசமுள்ள ரயில் இயந்திரங்கள் (Engines) மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன் காரணமாக, ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள ரயில் நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த ரயில் இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த ரயில் நேர அட்டவணையின் படி, சுமார் 450 ரயில் சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக ரயில்வே திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன.

இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் ரயில்வே திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் ரயில்வே திணைக்களத்திடம் 109 ரயில் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது. இதன்படி, 3 ரயில் இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 ரயில் இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன.

2023ஆம் ஆண்டில் ரயில்வே திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 ரயில் இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கசுன் சாமர மேலும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!