Monday, April 27, 2026
Huis Blog

பூநகரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..!

0

கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவமானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இயன்முகிலன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு பலமணி நேரம் ஆகியும் இளைஞனை காணவில்லை என தாய் மற்றும் தந்தை இணைந்து தேடியுள்ளனர்.

எனினும் தமது மகன் நண்பர்களுடன் எங்காவது சென்றிருப்பான் என்ற எண்ணத்தில் அவர்கள் உறக்கத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இன்று காலை குறித்த இளைஞனின் தந்தை மாடு கட்டுவதற்காக சென்ற நிலையில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் உயிரிழந்திருப்பதை அவதானித்ததாக தெரிய வருகின்றது.

இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இச் சம்பவம் குறித்து ஜெயபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் மனைவி மற்றும் சகோதரன் மீதும் கணவன் கத்தி குத்து தாக்குதல்..!

0

யாழ் – சாவகச்சேரி பகுதியில் இன்றைய தினம் (27) கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் வழக்குக்காக குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களை வீதியில் இழுத்து விழுத்திய கணவன், மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டார்.

இதன் போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந் நிலையில் சந்தேக நபரான கணவனை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது சகோதரனே தன்னிடமிருந்து பிரித்ததாக கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறை நகரசபை விவகாரம்; ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் செக்..!

0

வட மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் டக்ளஸ் டி போல் மற்றும் நகரசபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னரே நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தையைப் பழைய இடத்திற்கு மாற்றுவதற்குச் சபை மேற்கொண்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று கடந்த 2026 மார்ச் 12 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் மேல் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்தார்.

நகரசபையின் சனநாயக ரீதியான தீர்மானங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்றும், இது நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி என்பவர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே அதனைச் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தமையைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, இந்த விசாரணை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தவிசாளரைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியாகும் என்றும் வாதிட்டார்.

குறிப்பாக, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை இலக்கு வைத்து இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டத்தரணியின் வாதங்களை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா,மனுதாரர்களின் வாதங்களில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடாதென இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான பெனார்சி பிரதீபன் மற்றும் சி. அபினாஸ் ஆகியோரின் அனுசரணையுடன் கு. குருபரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெண்ணுக்குக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்..!

0

யாழ் – இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதான அவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

இதன் போது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபரான தேரருக்கு தடுப்புக் காவல்..!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை வழிநடத்திய பிரதான சந்தேக நபரான தேரரை , எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று (27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த தேரர் என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்பதற்காகக் காத்திருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுடன் 22 தேரர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற இந்த பிரதான சந்தேக நபர் மிரிஸ்வத்தை பகுதியில் தலைமறைவாகியிருந்தார். அங்கு வைத்து நேற்று (26) அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அமிதானந்த என்ற இந்த தேரரின் மருத்துவ அறிக்கையின்படி, அவர் கைது செய்யப்படும் வேளையில் போதைப் பொருள் உட்கொண்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்திய தமிழரசு கட்சியின் உறுப்பினர்..!

0

யாழில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் காரைநகர் பகுதி வீதியால் தலைக் கவசம் இன்றி சென்றுள்ளார். இதன்போது அவரை வழிமறித்த ஊர்காவற்துறை பொலிஸார் அவர் மதுபோதையில் இருப்பதாக சந்தேகித்தனர்.

அதன் பின்னர் அவரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் மதுபானம் பாவித்தமை உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.

அதன் பின்னர் அவரது வழக்கு கடந்த 20ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், சாரதி அனுமதிப் பத்திரமானது மூன்று மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் அதே நபர் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் முக்கிய பதவிக்கும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மதுபானம் பாவித்துவிட்டு வீதியில் விழுந்து கிடந்த இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த, பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

யாழில் ரிக்ரொக் காதலனுடன் மாயமான சிறுமி: விசாரணையில் சிக்கிய மற்றொரு மன்மதன்..!

0

ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமியை பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

ரிக்ரொக் மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருடன், 15 வயதான சிறுமி ஓட்டம் பிடித்துள்ளார்.

நெல்லியடி பொலிசாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிசார் கைது செய்தனர்.

சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவருடன் முறையற்ற விதமாக நடக்கவில்லையென காதலன் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கிய போது, அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, தனது பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலனால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான முன்னாள், இன்னாள் காதலர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் கடன் ஆவணங்களிலும் கை வைத்த ஹேக்கர்கள்; முறியடித்த காவல்துறை..!

0

பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதே ஹேக்கர்களே இந்த ஆவணங்கள் காணாமல் போனதற்கும் காரணமாக இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

காணாமல் போயுள்ள கோப்புகள் பிரான்ஸ் நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை தொடர்பானவை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்றுமொரு பாரிய நிதி மோசடியை முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட சைபர் தடயவியல் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.

இதன் ஒரு கட்டமாக, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கொடுப்பனவு மோசடியும் இதே திணைக்களத்தின் ஊடாகவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும், சமரசமற்ற அரசியல் பயணமும் – செந்தமிழன் சீமான்

0

தமிழக அரசியல் வரலாற்றில், திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்தை உடைத்து, “இனம்” என்ற ஒற்றைப் புள்ளியில் இளைஞர்களை ஒன்றிணைத்த ஒரு மாபெரும் சக்தி செந்தமிழன் சீமான்.

திரைத்துறையில் இயக்குநராகப் புகழ்பெற்ற ஒரு மனிதர், இன்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பதற்குக் பின்னால் இருக்கும் வரலாறு, தியாகம் மற்றும் கொள்கை உறுதி ஆகியவை ஆழமானவை. 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு, சிதறிக் கிடந்த தமிழினத்தின் உணர்வுகளைத் திரட்டி, ஒரு புதிய அரசியல் பாதையை அவர் அமைத்தார்.

தலைவனின் ஆசி

சீமானின் அரசியல் வேர் என்பது ஈழ மண்ணில் ஊன்றப்பட்டது. 2009-க்கு முன்னரே, போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலத்தில், துணிச்சலாக இலங்கை வன்னிப் பகுதிக்குச் சென்றவர் சீமான். அங்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்தச் சந்திப்பு ஒரு சாதாரணச் சந்திப்பாக அமையவில்லை; அது ஒரு தத்துவப் பரிமாற்றமாக அமைந்தது.

“நாங்கள் ஆயுதங்களை ஏந்திப் போராடுகிறோம், நீங்கள் அதே போராட்டத்தை அரசியல் களத்தில் முன்னெடுங்கள்” என்ற தலைவரின் ஆசியே சீமானை ஒரு முழுநேர அரசியல்வாதியாக மாற்றியது. அன்று முதல் இன்று வரை, “பிரபாகரனே எனது ஒரே தலைவன்” என்று அறிவித்து, அவரது படத்தையே தனது கட்சியின் சின்னமாகவும், அடையாளமாகவும் சீமான் பயன்படுத்தி வருகிறார்.

காங்கிரஸ் எதிர்ப்புப் போராட்டம்

ஈழத் தமிழர்களுக்காகச் சர்வதேச அரங்கில் குரல் கொடுத்த சீமான், கனடா நாட்டிற்குச் சென்ற போது அங்குள்ள அரசியல் அழுத்தங்களால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தமிழனாகத் தனது இனத்திற்காகக் குரல் கொடுத்ததற்காகச் சிறை சென்றது அவரை ஒரு சர்வதேசத் தமிழ்த் தலைவராக மாற்றியது.

2009-ல் ஈழத்தில் போர் உச்சமடைந்தபோது, இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்ததை எதிர்த்துத் தமிழகத்தில் கடும் போராட்டங்களை முன்னெடுத்தார். “ஈழத்தில் தமிழன் செத்து விழும் போது, இங்கே திராவிடக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் வேடிக்கை பார்க்கின்றன” என்று அவர் முழங்கியது தமிழக இளைஞர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. இதற்காக அவர் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA) உள்ளிட்டக் கடுமையான சட்டங்களின் கீழ் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார். சிறைக்கூடங்கள் அவரை முடக்கவில்லை, மாறாக ஒரு பெரும் இயக்கத்தைத் தொடங்க அவருக்கு உரமிட்டன.

நாம் தமிழர் கட்சியின் உதயம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆறாத வடு. புலிகள் இயக்கம் களத்தில் வீழ்ந்த பிறகு, தமிழினத்திற்குத் தலைமை தாங்க ஆளில்லை என்ற அவநம்பிக்கை நிலவியது. அந்தச் சாம்பலிலிருந்து 2010-ம் ஆண்டு மதுரையில் ‘நாம் தமிழர்’ கட்சியைத் தொடங்கினார் சீமான்.

“நாங்கள் திராவிடர்கள் அல்ல, நாங்கள் தமிழர்கள்” என்ற முழக்கத்தோடு, திராவிட அரசியலுக்கு மாற்றாகத் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்தார். இது வெறும் அரசியல் மாற்றமல்ல, இது ஒரு உளவியல் மாற்றம். தமிழர்கள் தங்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாக உணரத் தொடங்கிய தருணம் அது.

தமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும்?

தமிழக அரசியலில் கூட்டணி என்பதே ஒரு கலாச்சாரமாக மாறிப்போன சூழலில், “யாருடனும் சமரசம் இல்லை, மக்களுடன்தான் கூட்டணி” என்று அறிவித்து 2011 முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு வருகிறார் சீமான். மற்ற கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கும் போது, சீமான் தனது கொள்கைக்காகத் தேர்தல்களை ஒரு களமாக மட்டுமே பயன்படுத்துகிறார். இந்த உறுதிதான் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களை அவர் பின்னால் அணிவகுக்கச் செய்துள்ளது.

சீமான் முன்வைக்கும் மிக முக்கியமான கொள்கை ‘தற்சார்பு’. தமிழகத்தின் வளங்கள் தமிழர்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். “விவசாயத்தை அரசுப் பணியாற்றுவோம்” என்ற அவரது முழக்கம் புரட்சிகரமானது. மண்ணையும், நீரையும், காற்றையும் காப்பதே உண்மையான அரசியல் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, உள்ளூர் உற்பத்தியையும், சிறு தொழில்களையும் ஊக்குவிக்கும் அவரது பொருளாதாரக் கொள்கை தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிக அவசியமானது.

இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றம். ஆனால், தமிழகத்தில் இதனைப் பற்றிப் பேசும் முதல் அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சிதான். ஆறுகள் மணல் கொள்ளையடிக்கப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும் எதிர்த்துத் தொடர்ந்து களத்தில் போராடி வருகிறார். “மரம் நடுவோம், மண்ணைக் காப்போம்” என்பது இவருக்கு வெறும் முழக்கமல்ல, அது ஒரு வாழ்வியல் முறை.

பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் நடைமுறைப்படுத்திய ஒரே தலைவர் சீமான். சொல்லில் மட்டும் ‘பெண் விடுதலை’ என்று பேசாமல், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் சம அளவில் ஆண்களையும் பெண்களையும் நிறுத்தி, தமிழக அரசியலில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். எளிய குடும்பங்களில் இருந்து வந்த பெண்களைக் கூடத் தலைவர்களாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.

வாக்கு வளர்ச்சியும் மக்கள் செல்வாக்கும்

2011-ல் சில ஆயிரம் வாக்குகளுடன் தொடங்கிய பயணம், 2016, 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தின் மூன்றாவது பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.

எந்தவித ஊடக ஆதரவோ, பெரும் பணபலமோ இன்றி, வெறும் ‘உணர்வு’ மற்றும் ‘தத்துவம்’ ஆகியவற்றால் மட்டுமே இந்த வளர்ச்சி சாத்தியமானது. இளைஞர்கள் தங்களின் அடையாளமாகச் சீமானைப் பார்க்கிறார்கள். சமூக ஊடகங்கள் வழியாக அவர் கொண்டு சென்ற கருத்துக்கள் இன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒலிக்கின்றன.

சீமான் என்பவர் வெறும் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல; அவர் ஒரு இனத்தின் உணர்வு. “தமிழன் ஆள வேண்டும்” என்பது அதிகாரத்திற்காக அல்ல, தமிழன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அவர் உரக்கச் சொல்கிறார்.

மொழியை இழந்தால் இனம் அழியும், இனத்தை இழந்தால் நிலம் பறிபோகும் என்பதை உணர்த்தியவர் அவர். கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை இலவசமாகவும், தரமாகவும் வழங்க வேண்டும் என்ற அவரது ‘புரட்சிகரத் திட்டங்கள்’ தமிழகத்தின் ஆட்சி முறைக்கே ஒரு சவாலாக அமைந்துள்ளன.

தமிழகத்தின் தொன்மையானப் பெருமையை மீட்டெடுக்கவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு வளமான, பாதுகாப்பான ஒரு தமிழகத்தை ஒப்படைக்கவும் சீமானின் தலைமை அவசியமானது. அடிமைப்பட்டுக் கிடந்த ஓர் இனத்தை, அதன் வீரத்தையும் பெருமையையும் உணர்த்தி எழச் செய்த அந்த ‘அண்ணனின்’ கரங்களை வலுப்படுத்துவது, ஒவ்வொரு தமிழனின் வரலாற்றுத் தேவையாகிறது.

தூய்மையான அரசியல், நேர்மையான தலைமை, மற்றும் சமரசமற்ற தமிழ்த் தேசியம் ஆகியவற்றை விரும்பும் எவரும் சீமானைத் தவிர்க்க முடியாது. நாம் தமிழர் என்பது வெறும் பெயரல்ல; அது தமிழர்களின் தற்காப்பு அரண்.

முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு தேக்க நிலையில் இருந்த தமிழினத்தை, தனது உணர்ச்சிமிகு பேச்சால் எழுச்சியடையச் செய்து வரும் சீமான், வரும் காலங்களில் தமிழர்களின் அரசியல் அடையாளமாகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளை வழிநடத்திய தலைமை பிக்கு கைது..!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 110 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், பிக்குகள் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் தலைமைத் பிக்கு, கம்பஹாவின் மீகஹமுல்ல பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டார்.

1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்த போதைப் பொருள் பறிமுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதலாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதலுடன் துறவிகள் குழு ஒன்று கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!