Thursday, August 20, 2026
Huis Blog

உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் சிக்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்..!

0

உயர்தரப் பரீட்சை மண்டபம் ஒன்றில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் அங்கிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலை அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குறித்த இருவரும் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதன்படி, பிடிப்பட்ட மேற்பார்வையாளரையும் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரியையும் பரீட்சை மேற்பார்வை பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்ததாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் உடன் வேண்டும்..!

0

எமது சங்கத்தால் கடந்த திங்கட்கிழமை (17/08/2026) அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் உட்படாது, எமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான தீர்வை பெறும் வரை முன்னெடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகதர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (19.08.2026) இடம்பெற்ற ஆளுநருடனான சந்திப்பிற்கும் குறித்த போராட்டத்தை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்த எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எமது போராட்டத்தின் முதல்நிலை நோக்கமான ‘குறித்த அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்” என்பதில் இருந்து நாம் பின்வாங்கப் போவது இல்லை என்பதை எம் சக உத்தியோகத்தர்கள், எமக்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை உடையோருக்கு தெரியப்படுத்துகின்றோம்.

தொழிற் திணைக்களத்தில் முறையாக பதிவுசெய்து வடக்கு மாகாணம் தழுவிய வகையில் மாகாண சேவை மற்றும் மத்திய சேவையில் கடமையாற்றும் மூவாயிரத்துக்கும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டு கடந்த 10 வருங்களுக்கு மேலாக செயற்படும் நாம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி செயற்படுவோம் என்பதனையும், குறித்த போராட்டத்தின் இலக்கை அடைய நாம் ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்த குறித்த கலந்துரையாடலுக்கு, வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய எமக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை என்பதனை கவனத்தில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது போராட்டத்தையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் மலினப்படுத்தும் நோக்கோடு பிரதான தொழிற்சங்கமாகிய எம்மைத் தவிர்த்து பிறிதொரு பகுதியினரை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியமைக்காக எமது கண்டனத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் அவர்கள் முன்னெடுக்க மாட்டார் என நம்புவதோடு தனது நேர்மையான செயற்பாடுகள் மூலமாக ஜனாதிபதியால் ஆளுநராக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் எமக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் “வாய்மையே வெல்லும்” என்ற நோக்கோடு செயற்படுவார் என நாம் ஆணித்தரமாக நம்புகின்றோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களது காணிகளில் உப்பளம்; சஜித்தின் கவனத்திற்கு கொண்டு வந்த ரவிகரன் எம்.பி..!

0

முல்லைத்தீவு – கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக அத்துமீறி உப்பளம் அமைக்கப்படுகின்ற விடயம் தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 19.08.2026இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்படி விடயத்தினை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் இவ்வாறு தமிழ்மக்களின் தனியார் வயல் காணிகளை அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனியார் ஒருவர் உப்பளம் அமைக்கின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது வன்னிப் பகுதியிலோ வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து உப்பளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் 54ஏக்கர் தனியார் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்பட்டு வருவதாகவும், மாத்தளன் பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு ஏற்ற அரச காணிகள் காணப்படுவதாகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச,

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த விடயத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராயப்படுமென அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றும் போது பராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி வருகின்றோம்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன.

இவ்வாறான அடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான். இது தொடர்பாக கடந்த 2026.03.12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கௌரவ. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கௌரவ அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்பட்டது.

குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.

அமைச்சர் அவர்களால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

பின்னர் எமது, கோரிக்கைக்கு அமைய , மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என நில அளவை அத்தியேட்கரால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு 2026.07.28 அன்று கடிதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.

மகாவலி அதிகார சபை இந்தத்தீவிலுள்ள அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல் வடகிழக்கில் இனப் பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர் அமைப்பாகவே செயற்படுகிறது.

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட உப்பளமும் அதற்கு ஒரு சான்று என இப் பேரவையில் மீண்டும் பதிவு செய்கிறேன். தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் தெரிவிக்கின்றேன் – என்றார்.

கல்முனை தாதியர்களின் சீருடைச் சர்ச்சை; சுகாதார அமைச்சருடன் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு..!

0

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் எழுந்த தாதியர்களின் சீருடை தொடர்பான விவகாரம் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்துச் சுகாதார அமைச்சர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டது.

​அம்பாறை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்தைப் பேணுதல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சீரான செயற்பாட்டை உறுதி செய்யும் நோக்கோடு இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று 19.08.2026 சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

​இச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள், வைத்திய சாலையின் நிர்வாகக் கட்டமைப்பு சீராகச் செயற்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், சில சமூக ஊடகங்களில் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கருத்துக்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட அவர், மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வுகளை அமைதியான வழியில் கையாண்டு இவ் விவகாரத்திற்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுமாறு அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

​இக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைத்து மாணவர்களுக்கும் பட்டம் பெறும் வரை கல்விப் பாதை உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்

0

புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக உருவாக்கப்படவுள்ள கல்வி முறைமையை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரையிலான தெளிவான கல்விப் பாதைகள் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அகில இலங்கைத் தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாதியர் தொழிற்கல்வி டிப்ளோமாவுடன் முடிவடையாமல், பட்டப்படிப்பு வரை தொடரக்கூடிய கல்விப் பாதை உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான உயர்கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, தாதியர் பட்டப்படிப்புக்கான கல்வி வழிகாட்டி வரைபடத்தைத் தயாரிப்பது மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் கல்வியியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரு வழிகளிலும் மாணவர்கள் பட்டம் பெறுவதற்கும், தொழிலில் பிரவேசிப்பதற்குமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாதியர் பட்டப்படிப்பின் மூலம் தாதியர் சேவையின் தரத்தை மேம்படுத்துவதுடன், பராமரிப்புச் சேவை, முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட சுகாதாரத் துறையின் ஏனைய தொழில்களிலும் தொழிற்கல்வி வழியாக உயர்கல்வி வரை கற்கக்கூடிய கல்வி நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அகில இலங்கைத் தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவஆரச்சி, செயலாளர் எஸ்.பி. மெதிவத்த உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சுகாதார பரிசோதகரால் கல்முனை பிரபல பாடசாலை மாணவர்களிடம் அங்கசேட்டை..!

0

அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச் சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (18) மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இத்தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அம்முறைப்பாட்டிற்கு அமைவாகப் புதன்கிழமை (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச் சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம் அளிப்பதற்காக உடனடியாகச் சமூகமளிக்குமாறு காவல்துறையினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட அதிகார சபை, கல்முனை தலைமையக காவல்துறையினர் மற்றும் அம்பாறை மாவட்டச் சிறுவர் பெண்கள் காவல் பிரிவினருக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில், கல்முனை தலைமையக காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி உள்ளிட்ட காவல்துறை குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் முகாம் இருப்பதாக பொய் கூறியவருக்கு விளக்கமறியல்..!

0

பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய் தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகபர், இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், ஊடக சந்திப்பொன்றை நடத்தி விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களை வெளியிட்டதற்காக நேற்று (18) கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு..!

0

கிழக்கு பல்கலைக் கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த சம்பவத்தை இன்று புதன்கிழமை (19) பிற்பகல் நேரில் கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்நிலையில், விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் சுமார்.12.00மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனை கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்த மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

அதன்போது, தவறான முடிவெடுத்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

34,000 கோடி பெறுமதியான டொலர் நாட்டிலிருந்து வெளியேறியது எப்படி?

0

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 340 பில்லியன்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக Seylan, Sampath, Union மற்றும் NTB வங்கிகளின் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையில் முக்கிய முன்னேற்றமாக, இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு நேரடியாக உதவியதாகக் கூறப்படும் நான்கு முன்னணி தனியார் வர்த்தக வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வங்கி வரலாற்றில் முதல் முறையாக, நான்கு வங்கி முகாமையாளர்களும் அவர்கள் பணியாற்றிய வங்கி வளாகத்திலிருந்தே நேரடியாக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைப் பிரிவின் தகவலின்படி, போலியான இறக்குமதி ஆவணங்களை வழங்கியதற்கும், சட்டவிரோதமான Telegraphic Transfers (TT) பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவியதற்கும் பின்வரும் வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது:

Seylan Bank – Old Moor Street கிளை
முகாமையாளர் – Shiran Mario Fernando

Sampath Bank – தலைமையகம்
Umesh Randika

Union Bank – Pettah Main Street கிளை
Dharmalingam Prasad

Nations Trust Bank (NTB) – Old Moor Street கிளை Amila Udara Liyanamanna

இவர்கள் இதற்காக மாதாந்தம் பெருமளவு தொகையினை இலஞ்சமாக பெற்று வந்துள்ளதாக அறிய வருகிறது

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் திட்டம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணையில் மேலும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக தனியார் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து பணம் பெற்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நான்கு முன்னணி தனியார் வங்கிகளுடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அவரவர் பணியிடங்களில் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் ஓகஸ்ட் 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவ்வகையான ஒரு விசாரணையில் இதுவே முதல் கைது நடவடிக்கை என்று நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை, கூறப்படும் இந்த நிதி நடவடிக்கை தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஜெஃப்ரி முகமதுவை மையமாகக் கொண்டுள்ளது.

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, முகமது சுமார் 36 நிறுவனங்களை நிறுவி, அந்நிறுவனங்களுடன் தொடர்புடைய கணக்குகளைத் திறப்பதற்காக நான்கு தனியார் வங்கிகளை அணுகியதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இருப்பினும், இறக்குமதிக்கான கொடுப்பனவுகளாக அந்தக் கணக்குகள் மூலம் பெரும் அளவிலான வெளிநாட்டு நாணயம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதற்குரிய பொருட்கள் ஒருபோதும் இலங்கைக்குள் கொண்டுவரப்படவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் முகமதுவை நேரில் சந்தித்து, அவருக்கு வங்கிப் பரிவர்த்தனைகளில் உதவியதாகவும், இந்தச் சந்திப்புகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) குற்றம் சாட்டியுள்ளது.

விசாரணையாளர்களின் கூற்றுப்படி, அந்த அதிகாரிகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாரத்திற்கு ரூ. 30,000 முதல் ரூ. 100,000 வரை பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு அதிகாரி ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் ரூ. 1 மில்லியன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வங்கிக் கணக்குகளைத் திறக்க வசதி செய்து கொடுக்கும்போது, ​​தேவையான சோதனைகளை அந்த அதிகாரிகள் நடத்தத் தவறியதாகவும் விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிறுவனக் கணக்குகளைத் திறக்கும்போது, ​​வங்கி அதிகாரிகள் தொடர்புடைய நிறுவனப் பதிவு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும், சந்தேக நபர்கள் போதுமான சோதனைகளை மேற்கொள்ளாமல் இந்தச் செயல்முறைக்கு உதவியதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நிறுவனங்களின் ஊடாக 10,151 பரிவர்த்தனைகள் மூலம் இலங்கைக்குள் அதற்கு இணையான இறக்குமதிகள் ஏதுமின்றி சுமார் 75 பில்லியன் ரூபாய் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.

இந்த நிதி நடவடிக்கைக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையே உள்ள சாத்தியமான தொடர்புகளையும் விசாரணை ஆராய்ந்து வருகிறது.

சுகாதார பரிசோதகர்களின் அதிரடி; யாழில் கார்கில்ஸ் பூட்சிற்றி இழுத்து மூடப்பட்டது..!

0

காலவதியான உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ் கோண்டாவில் சந்தியில் அமைந்திருந்த கார்கில்ஸ் பூட் சிற்றியின் வியாபார உரிமையை இரத்தச் செய்யுமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காலவதியான சொக்லேட்டுக்கள் மற்றும் பால்போத்தல்கள் உட்பட பல பொருட்கள் குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இவற்றைப் பரிசோதித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர்.

ஏற்கனவே குறித்த விற்பனை நிலையத்தில் இவ்வாறான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் மீண்டும் காலவதியான பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமையை நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்தே குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார உரிமைத்தை நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!