Tuesday, August 11, 2026
Huis Blog

பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது..!

0

தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 40,000 ரூபாய் இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) திங்கட்கிழமை அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த அலுவலர் அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் அலுவலராவார்.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் குறித்த உத்தியோகத்தர் பணத்தை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அவரை கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகிழக்கின் பல்வேறு அலுவலகங்களில் கடமை புரியும் இத்தகைய தொழிநுட்ப அலுவலர்களால் இலஞ்சம், ஊழல், தரமற்ற கட்டுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல்களை வழங்குகின்ற போதும் குறிப்பாக வடக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதுவித கண்காணிப்பையோ, நடவடிக்கைகளையோ மேற்கொள்வதில்லை எனப் பலரும் குற்றம் சுமத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கறுப்புச் சந்தை ஆயுத கொள்வனவும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்; சீனாவின் கோர முகமும்..!

0

ஈழத் தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத் தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை.

ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிக் களிப்புரை, வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.

‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்

2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. “பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?” என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.

“இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்” என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்த போது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.

அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்

போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர் கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.

இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’

“ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்” என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.

‘பொருட்களைப் பெற்றுக் கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.

போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்த போது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

வடக்கு – கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்

தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு – கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு – கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.

வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்

நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.

வடக்கு – கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்று கொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.

நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து

கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.

தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.

அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.

உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.

சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத் தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.

கோட்டாவின் விசுவாசியான நிஸ்ஸங்க சேனாபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்; கைதாகுவாரா?

0

அவான்-கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாபதி இன்று (11) காலை ஊழல் அல்லது இலஞ்சம் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

‘கிரிஷ்’ (Krrish) திட்ட ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைக்குத் தொடர்புடைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கீரிமலையில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி போராட்டம்..!

0

யாழ் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான நாளை புதன்கிழமை (12) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழ்வதற்காக தோண்டப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியுள்ளனர்.

கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வட மாகாண ஆளுநர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும், இதுவரை காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் புதன் கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட குப்பைகளால் ஏற்படும் சூழல்சார், சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது முன்னோருக்கு பிதிர்க்கடன்களை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாடச் செல்வார் என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவாசை தினத்துக்கு முன்னர், மீண்டும் அள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ளுவதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதிகளின் பதவி நீடிப்பு விவகாரம்; ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்க சந்திப்பு நாளை..!

0

நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பான விடயங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை புதன்கிழமை (12) நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் மூலம் குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பரீட்சை நிலையமொன்றில் முறைகேடு; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..!

0

பரீட்சை நிலையமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உரிய வலயக் கல்வி பணிமனை மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

கேகாலையில் பரீட்சை நிலையம் ஒன்றில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது, மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வினாத்தாள் வழங்கப்பட்டு, உரிய நேரத்துக்குள் மீள சேகரிக்கப்பட்டதாக மாணவர்களும் பெற்றோரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

இவ்வாறான சம்பவங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

அத்துடன், “தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை” தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அநீதி; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு..!

0

நேற்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

கிரிந்திவெல, போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சிலர், கிரிந்திவெல மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களின் குற்றச்சாட்டின்படி, முற்பகல் 11.15 மணிக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள், குறித்த பரீட்சை மத்திய நிலையத்தில் மாணவர்களுக்கு முற்பகல் 11.30 மணியளவிலேயே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வினாத்தாள் பிற்பகல் 12.15 மணியளவில் மீண்டும் மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, தமது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பரீட்சை நேரத்தில் சுமார் அரை மணி நேரம் வரை குறைந்துள்ளதாகவும், இதனால் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுகையில் தமது பிள்ளைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களின் கல்வி எதிர்காலத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பரீட்சையாகும்.

இந்நிலையில், பரீட்சைக்கான நேரம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமது பிள்ளைகளின் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கம்பஹா வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த கலந்துரையாடலின் மூலம் தங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பெற்றோர்கள், பின்னர் கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது பிள்ளைகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த அநீதிக்கு உரிய தீர்வை வழங்குவதுடன், சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பரீட்சை நேரம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிர்வாகத்தினரின் உத்தியோகபூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதி உறுதி

0

பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “தேசமே ஒன்றிணைந்த” தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தில், இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டின் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வருட இறுதிக்குள் 2026 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள்..!

0

இன்று (10) ஆரம்பமாகிய 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று காலை (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றுகின்றனர்.

இன்று ஆரம்பமாகிய உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகள் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்தார்.

மேலும், பரீட்சை மண்டபங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை எனவும், பரீட்சை விதிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்கள்..!

0

மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகர சபை உறுப்பினர் ராசிகா குணசிங்க கோரிக்கை விடுத்தார். கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற மகரகம நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.

தேசிய மக்கள் சக்தியின் சமன் சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நகர சபை கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த ராசிகா குணசிங்க,

17 வயதுடைய இந்த மாணவி நூலகத்தின் மேல் மாடியில் படித்துக் கொண்டிருந்து கீழே வந்த போது அதிகாரிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அங்கு யாரும் இல்லாததால் பயந்துபோன மாணவி சத்தமிட்டு அழுதார், வீதியில் சென்ற இரண்டு குழந்தைகளுக்கு அந்த சத்தம் கேட்டு நகர சபை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்

பின்னர் இரண்டு தொழிலாளர்கள் கூரையின் வழியாக நூலகத்திற்குள் குதித்ததால் மாணவி மேலும் பயந்துபோனார், பின்னர் வேறொருவர் சாவியைக் கொண்டுவந்து கதவைத் திறந்து அவரை வெளியே கொண்டுவந்தார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு தொழிலாளி மாணவியை காணொளி எடுத்ததால் மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி முகத்தை மூடிக்கொண்டிருந்தார் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளனர் என்றும் உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நகர சபை தலைவர் சமன் சமரகோன் , இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!