“1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசியக் கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள். பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் ராணுவத்தினர் கோடு போட்டனர். அதன் பின்னரே வந்த ஐதேக காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம் குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.
தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் கொண்டு வந்தார்கள்.
1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் மோசடி செய்தனர். எங்களின் இதயமாகக் கருதப்பட்ட யாழ். பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்களும் அவர்களே.
அக்காலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வடக்கு மக்களின் விருப்பம் பிரதிபலிக்கவில்லை. அதற்கு எதிராக எமது தலைவர் ரோஹண விஜேவீர வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால், எமது கட்சியைத் தடை செய்தார்கள். தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால், ஜே.ஆரின் அடக்குமுறைகளை எதிர்த்திருப்பார்கள்; கறுப்பு ஜூலை போன்ற கொடூரச் சம்பவமும் நடந்திருக்காது” எனத் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த அரசு பொறுப்பேற்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஸன நாணயக்கார அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இன்று (24.07.2026) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கெளரவ ஹர்ஸன நாணயக்கார அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு விரும்புகிறேன்.
கெளரவ அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பலவற்றுக்கு பதில் சொல்லவேண்டிய, பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு அமைச்சர் அவர்களுக்கும் இந்த அரசாங்கத்திற்கும் உள்ளது என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை.
நீர்கொழும்பு சிறைக்கூடத்தில் நடந்த அநியாயமான கொலைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டியது மட்டுமல்ல அவ்விடயம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு கெளரவ அமைச்சருக்கு உள்ளது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இவ்வாறான ஒரு சிறைக்கலவரம் வருவதற்கு ஏற்ற பல காரணங்கள் அங்குள்ளது, அங்கு மாத்திரமல்ல இன்னும் பல சிறைச்சாலைகளில் உள்ளது. ஆனால் எமக்கு இருக்கும் கேள்வி
இந்நிலை ஏற்படுவதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர் தற்போதை கெளரவ அமைச்சர் அவர்கள் மட்டுமா? அல்லது இதுவரை காலமும் இருந்த அனைவருமா?
சிறைச்சாலைகளில் காணப்படும் பிரச்சனைகள் கடந்த காலங்களில் காணப்படவில்லையா? கடந்த காலங்களில் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது எந்த அமைச்சர், எந்த அரசாங்கம் பொறுப்புக்கூறியது?
இவ்வாறான படுகொலைகள் ஒருதடவையா நடந்தது? மீண்டும் மீண்டும் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?
அங்கு காணப்படும் பிரச்சனைகளுக்கு பொறுப்பு சொல்வதற்காக கடந்த காலத்திலும் அமைச்சர்கள் பலர் பதவி விலகியிருக்க வேண்டுமில்லையா? ஏன் அவ்வாறு செய்யவில்லை??
அவ்வாறான பிழைகளை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து சுயமாக விலகும் கலாச்சாரம் எமது நாட்டில் அன்றும் இல்லை இன்றும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் அமைச்சர் ஹர்ஸன அவர்கள் சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரத்தில் சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட முன்னரே அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார், அதற்காக அவரை பாராட்டுகின்றோம்.
ஆனால், கெளரவ அமைச்சர் அவர்கள் பதவியில் இருந்து விலக அல்லது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரக்கூடிய சில காரணங்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்திக்கு நாடுமுழுவதிலும் விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவான மக்கள் வாக்களித்தது ஒரு மாற்றத்தை வேண்டி என்று நேற்று இங்கு உரையாற்றிய கெளரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் தெரிவித்தார். அவர் குறிப்பிட்டது உண்மை. ஆனால் அதை புரிந்தவர்களாக அந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஏதாவது முயற்சி எடுக்கிறீர்களா என அதே மக்கள் சந்தேகம் கொள்ளுமளவிற்கு நடந்து கொள்கிறீர்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மிக முக்கியமான சில விடயங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பில் உள்ள கெளரவ அமைச்சர் அவர்கள் அவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமையையிட்டு மனம்வருந்துகிறோம்.
புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டு வருவோம் என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி. அதற்காக அமைச்சர் அவர்கள் எடுத்த முயற்சி என்ன?
அடுத்தது அரசியல் கைதிகள் விடுதலை,
கெளரவ உறுப்பினர் அஜித் பி பெரேரா அவர்களின் அரசியல் கைதிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திலும் ஏனைய ஒழுங்கு விதிகளிலும் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கெளரவ அமைச்சர் அவர்கள் பதிலளித்தார். அப்படியாயின் உங்களுடைய தேர்தல் அறிக்கையில் அரசியல் கைதிகள் என்று யாரை குறிப்பிட்டீர்கள்?
செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்வுகள் நடைபெறுகிறது. கடந்த மாதம் கெளரவ சாணக்கியன் அவர்கள் 27/2 இனூடாக அமைச்சர் அவர்களிடம் கேள்வியொன்றை கேட்டிருந்தார். அதன் போது அகழ்வுப்பணிகள் நடைபெறும் அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஆராய்ந்து படுகொலைகள் நடைபெற்ற காலம் மற்றும் டி என் எ பரிசோதனைகள் ஊடாக அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்பாக பேசியிருந்தார்.
ஆனால் ஏற்கனவே சந்திரிக்கா அம்மையாருடைய காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்ட 12 மனித எச்சங்களை ஆராய்வதனூடாக படுகொலைகள் நடைபெற்ற காலத்தையும் படுகொலை செய்யப்பட்டவர்களை அடையாளம் காணும் செயற்பாட்டையும் செய்யலாம்.
ஆனால் கெளரவ அமைச்சர் அவர்களால் அவ்வாறான செயற்பாட்டுக்கான நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும். எனவே எதிர்வரும் காலத்திலாவது அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
எனவே இறுதியாக ஒரு விடயத்தை இந்த உயரிய சபைக்கு கூற விரும்புகிறேன். அதாவது எமது நாட்டில் அரச சேவையில் காணப்படும் முறைமைக் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்காமல் தனிநபர்களை குற்றம் சுமத்துவதனாலோ அல்லது மாற்றுவதனாலோ இப்பிரச்சனைகளிற்கு தீர்வு காண முடியாது.
எனவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அச்சந்தர்ப்பம் கிடைக்காத அனைவரும் ஒன்றுசேர்ந்து அரச சிறைச்சாலை முறைமை மாற்றத்திற்கு உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச் சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், மேற்கூறிய இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம், 011-2784208 அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (24) பிற்பகல் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர் ஏற்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.16.5 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் பொது தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசின் கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தேர்வு செய்து, அதற்கு சாதகமாக செயற்பட்டு அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப் பிலவு கிராம மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக 18.07.2026 இன்று தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் தமது போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அதன் தலைவர் ஜனக ராஜகருணா தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலைகள் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன.
இன்று காலை நிலவரப்படி பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 85 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
அமெரிக்க WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் நாட்டுக்குப் பெற்றோலிய உற்பத்திகளைக் கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை.
எனினும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள் சவாலாக அமைந்துள்ளாதாகவும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த மாத இறுதியில் மக்களுக்கு பாரிய நன்மைகளை வழங்க எதிர்பார்த்ததாகவும் தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைய அந்த நிலைமை சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாகினும் எதிர்வரும் 15 நாட்களில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையிலேயே அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.
முத்துராஜவெல பிரதேசத்தில் மேலும் 7 எண்ணெய் களஞ்சியப்படுத்தல் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவற்றில் 4 தாங்கிகள் விமான எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.
பெற்றோலிய விநியோகம் மற்றும் களஞ்சியப்படுத்தல் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த களஞ்சியத் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
முத்துராஜவெலயில் 3 தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான விலைமனுக்களைக் கோரும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் இரு களஞ்சிய தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை,அடுத்த மாத இறுதியளவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக முத்துராஜவெலயில் இருந்து கட்டுநாயக்க வரை எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக 21 கிலோமீற்றர் நீளமான குழாய் மார்க்கமொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.
கொழும்புத் துறைமுக வளாகத்திலிருந்து கொலன்னாவை வரை எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் மார்க்கமொன்றை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.
இந்த திட்டங்களின் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் மேம்படுத்தப்படுமென அவர் கூறினார்.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை 2 மடங்காக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலைகள் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன.
இன்று காலை நிலவரப்படி பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 85 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
அமெரிக்க WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் நாட்டுக்குப் பெற்றோலிய உற்பத்திகளைக் கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள் சவாலாக அமைந்துள்ளாதாக அவர் கூறினார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த மாத இறுதியில் மக்களுக்கு பாரிய நன்மைகளை வழங்க எதிர்பார்க்கப் பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைய அந்த நிலைமை சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.
எதிர்வரும் 15 நாட்களில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையிலேயே அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுமென அவர் கூறினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்கின்றி தடுத்து வைத்திருப்பது, அவரை விடுவிப்பதற்கான ஒரு “விதிவிலக்கான சூழ்நிலை” (exceptional circumstance) என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் (என்றழைக்கப்படும் தனுஷ்) என்பவருக்கே பிணை வழங்க மறுத்து கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ரத்து செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது 26 வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், அவர் தனது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதியினை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தே சிறையில் கழித்துள்ளார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த நபர் மீது, 2012 செப்டம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப் பத்திரிகையில் மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் (PTA கீழ் 115, அவசரகாலச் சட்டத்தின் கீழ் 115) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 106 அரசுத் தரப்பு சாட்சிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகள் வருமாறு:
1. ரூ. 200,000 ரொக்கப் பிணை. தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான நான்கு ஆள் பிணைகள்.
2. காவல்துறை தலைமையகத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும்.
3. பிரதிவாதியின் கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த பிணை நிபந்தனைகள் எதனையாவது மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 15B பிரிவை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன் மூலம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் நீதிமன்றங்களுக்கு பிணை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்த போது இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அவதானித்துள்ளது.
மேலும், இந்த நபர் கைது செய்யப்பட்ட போது அவரது மகளுக்கு ஒரு வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், இத்தனை ஆண்டு கால நீண்ட தடுப்புக்காவல் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரது பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்து தவித்துள்ளனர் என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான அஸ்திக தேவேந்திர மற்றும் அருண மதுசங்க ஆகியோர் முன்னிலையாகினர். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தார்.
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவிலிருந்து இரட்டைபெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜன்டான கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.