Tuesday, February 3, 2026
Huis Blog

பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி

0

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே 04.02.2026 நாளைய தினம் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஊடகங்களுக்கு 03.02.2026 இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாளானது தமிழ் மக்களால் நேசிக்கப்படக்கூடியதாகவோ, கொண்டாடக்கூடியதாகவோ இல்லை. தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லாத ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. ஒடுக்குமுறைகள் மிக அதிகமாகி வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களே ஏராளம்.

நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட முன்னைய ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள். ஆனால் இதுவரை எமக்குத்தான் விடிவில்லாமல் அலைகின்றோம் எனத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள்.

தமிழர் தாயகப்பரப்புகளில் தொடர்சியாக நிலஆக்கிரமிப்புக்கள், பௌத்த மயமாக்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்குவதற்காக திட்டமிட்டு பெரும்பான்மையினக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை, சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் இதுவரை விடுக்கப்படாமை, தமிழர்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியைக் கோருகின்ற போதும் இதுவரை ஆட்சியாளர்கள் அதற்கு செவிசாய்க்காத நிலை, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி இதுவரை வழங்கப்படாமை என இந்தநாட்டில் தமிழர்கள் ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக பலவழிகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வாறு இலங்கையின் சுதந்திரதினத்தை கொண்டாடுவது என்ற எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள அரச அலுவலகங்களில் கூட இலங்கை சுதந்திரதினம் மனமகிழ்வோடு கொண்டாடப்படுவதில்லை. ஒரு சம்பிரதாய செயற்பாடாகவே சுதந்திர தினச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எங்களுடைய இளைஞர்களே எங்களுடைய எதிர்காலம். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04ஆம்திகதி பல்கலைக் கழக சமூகம் “ஸ்ரீலங்காவிற்கு சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்று ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இளைஞர்கள் 04.02.2026ஆம் திகதி நாளையதினம் தமிழர்கள் தமது வேதனையை வெளிப்படுத்தும் “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே குறித்த கவனயீர்ப்பிற்கு அணிதிரண்டு ஆதரவு நல்குமாறு அனைத்து தமிழ் மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

சுதந்திர தினம் கறுப்பு நாள்; போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ரெலோ..!

0

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(03) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் என சொல்லப்படுகிறது. உண்மையிலேயே இலங்கை சுதந்திரமடைந்து 76ஆண்டுகள் கடந்துகொண்டு இருந்தாலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது பேச்சளவில் பேசப்படுகின்ற ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுகிறது.

இலங்கை தீவில் சிங்கள மக்களுக்கு தான் அந்த சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. ஏனைய இனங்களுக்கு அந்த சுதந்திர காற்று என்பது சரியாக கிடைக்கவில்லை. அடக்குமுறைக்குள் இருக்கின்ற இனமாகவே ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள்.

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கின்ற நோக்கமாக, நாங்கள் தமிழ் மக்கள் என்ற வகையில் இதுவரை சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்ற விடயத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே முயல்கின்றோம்.

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை நம்ப வைத்து தமது நிகழ்ச்சி நிரல்களை நடத்திச் செல்வதே அவர்களுடைய நோக்கமாக இருக்கின்றது.

அதுபோல தான் அனுர அரசும் இனவாதமற்ற, மதவாதம் அற்ற நாட்டை கட்டி எழுப்புவதாகவும் தங்களது ஆட்சியில் இனவாதம் மதவாதம் என்பதற்கு இடமில்லை என்ற வகையிலும் போலிப் பிரசாரங்களை செய்கின்றனர் என்றார்.

பிரதி அமைச்சரால் பழிவாங்கப்பட்டதாக தவிசாளரால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..!

0

கிபுள் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கிபுள் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்றய தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு இன்று அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றையதினம் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது.

அதில் நான் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். அந்த கூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்றபோது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.

வழமையாக கூட்டம் இடம்பெறும் போது எனக்கு வழங்கப்பட்டு வந்த இடத்திலேயே நான் அமரச் சென்றேன். அத்துடன் கூட்டம் ஆரம்பிக்க முன்னரே தமிழ்மொழி பெயர்ப்பு தேவை என்பதை பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் அந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே என்னை அவமதிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்ப்பாட்டை மேற்கொள்கிறீர்கள் என ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதும் மக்கள் பிரதிநிதி என்று பாராமல் அவர்கள் அவமதித்துள்ளனர்.

இதனால் இக்கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறி விட்டேன்” என்றார்.

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய சித்திரவதை முகாம் அம்பலம்..!

0

திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில் நிலத்துக்கு அடியில் உள்ள கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவால் பொல்கஹவெல நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையின் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலால் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட தனி வழக்கிலேயே, பொல்கஹவெல நீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கன்சைட் முகாம் வளாகத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய விரிவான கண்டுபிடிப்புகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதுடன், காவலில் இருந்தபோது அவர்கள் அனுபவித்ததாகக் கூறப்படும் சித்திரவதைகளை விவரிக்கும், கைதிகளாக இருந்தவர்களின் வாக்கு மூலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட குறித்த நபர் கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்; நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட தகவல்..!

0

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் மீண்டும் வான் பாயத் தொடங்கியுள்ளன. மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இந்த நிலைமையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே குளங்களின் வான் பாயும் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருப்பது அவசியம்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த நாட்களில் இந்த செயற்பாடுகளைத் தவிர்க்கவும்.

விதைப்புக்காலத்தின் சீரற்ற மழை, டிட்வா புயல் மற்றும் வெள்ளம், நோய்கள் , குறைவான சந்தை விலை போன்ற பல நெருக்கடிகளில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உங்கள் நெல் அறுவடையையும் நெல் உலர விடும் செயற்பாட்டினையும் திட்டமிட்டு மேற்கொண்டு அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்..!

0

எதிர்வரும் 2ம் திகதி இடம்பெறவுள்ள கிவுல் ஓயா தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஒன்றிணைந்த செயற்பாட்டாளர்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 02.02.2026 ஆம் திகதி காலை 10 மணிக்கு நெடுங்கேணி பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் இப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து வருகைதந்து எமது தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்புக்கும் திட்டமிட்ட இனப் பரப்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ். இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு; நீதிமன்றின் அதிரடி..!

0

யாழ் இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தை மூல வழக்குடன் சேர்த்து நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் கடந்த (27-01-2026) அன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதலாம் எதிர்மனுதாரரான ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பமே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஏற்கனவே விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குடன் இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தையும் சேர்த்து நடாத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த விண்ணப்பமானது எதிர்வரும் (03-07-2026) ஆம் திகதிக்கு அடிப்படை உரிமை மீறல் வழக்குடன் சேர்த்து விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனுதாரர்களான அமிர்தலிங்கம் லதாங்கன், திருநாவுக்கரசு சிவகுமரன் மற்றும் நடராஜா சிவானந்தராஜா ஆகியோர், முதலாம் எதிர் மனுதாரரான ரட்ணம் செந்தில்மாறன் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவாதத்திற்கு எதிராக நடந்து கொண்டுள்ளார் என்ற அடிப்படையில் இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

யாழ் இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கின் ஒரு பகுதியாக இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாகராஜா வித்தியாலயத்தினை 1C பாடசாலையாக தரமுயர்த்த சத்தியலிங்கம் எம்.பி கோரிக்கை…!

0

வவுனியா சிதம்பரபுரம் ஶ்ரீ நாகராஜா வித்தியாலயத்தினை தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கையெடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுனர், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயமானது தற்போது தரம் 2 பாடசாலையாக இயங்கி வருகின்றது.

1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுமார் 4 ஏக்கர் விஸ்தீரணமுடைய குறித்த பாடசாலையில் தற்போது 615 வரையிலான மாணவர்களும் 32 ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 35 பேர் பணிபுரிகின்றனர்.

இங்கு தரம் 12, 13 வகுப்புக்கள் 3 ஆண்டுகளாக இடம்பெற்ற போதிலும் கல்வி திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையினால் கல்விகற்ற மாணவர்கள் அருகிலுள்ள கோமரசங்குளம் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தூரம் மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் இப்பாடசாலையில் தரம் 12,13 வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளமை காலத்தின் தேவையாகும்.

மேற்படி பாடசாலையினை தரமுயர்த்துதல் தொடர்பில் வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு மற்றும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் நான் கோரிக்கை முன்வைத்திருந்தேன்.

மிகவும் அதிகஸ்ர பகுதி மாணவர்களை கொண்ட இப்பாடசாலையினை குறித்த பகுதியின் நலனை கருத்திற் கொண்டும் மாணவர்களின் சிறந்த கற்றல் நடவடிக்கையின் பொருட்டும் தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த ஆவன செய்யுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ் பண்டத்தரிப்பில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ முகாம்..!

0

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காடாப்புலம் காணியானது இன்று புதன்கிழமை பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பாடசாலை மாணவனுடன் உல்லாசம்; ஆசிரியைகள் அனைவரும் உடனடி பணி நீக்கம்..!

0

இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.​

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.​

சைபர் குற்றத்தடுப்பு பிரிவு-காணொளிகள் கசிந்த விதம் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் குறித்து காவல்துறையின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினர் தனி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.​

நாட்டின் முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியைகள் சமூகப் பிறழ்வான செயல்களில் ஈடுபட்டமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரையும் அரச சேவையிலிருந்து முழுமையாக நீக்க வேண்டியது கல்வி அமைச்சரின் பொறுப்பாகும்.

ஒழுக்கமற்ற கல்வி மாணவர்களை எங்கு கொண்டு சேர்க்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

error: Content is protected !!