யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களுடன் உரையாடிய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் நேற்றைய தினம் (25) இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
அந்த காணியானது தனது காணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறி வருகின்ற நிலையில், வேறொரு தரப்பினரும் அதில் தங்களது காணி இருப்பதாக உரிமை கோரி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் குறித்த காணியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபடும் போது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அதில் ஒருபகுதி தமது காணி என்று கூறி முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தனது தற்காப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்து பெண்களை அச்சுறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களும் தன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும் அதனாலேயே தனது பாதுகாப்பிற்காக வெளியில் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி தரப்பால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறைகளுக்கான மின்னிணைப்புத் திருத்தத்திற்கென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 2026ஆம் ஆண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 200,000 ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரால் குறித்த பாடசாலைக்கு இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கடந்த 23.04.2026அன்று குறித்த பாடசாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
அந்தவகையில் 50மாணவர்கள் கல்விகற்கும் குறித்த பாடசாலைக்கு 18 ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணிகள் காணப்படுகின்ற போதும், தற்போது 11ஆசிரியர்களே அங்கு பணியாற்றுவதாக இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதற்கமைய கணிதப் பாடத்திற்குரிய ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுவதுடன், ஆரம்பப் பிரிவிற்குரிய இரண்டு ஆசிரியர்களும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
அதேவேளை இப்பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாத நிலையில் ஆரம்பப் பிரிவிற்குரிய ஒரு வகுப்பறைக் கட்டடத்தை விஞ்ஞான ஆய்வுகூடமாக பயன்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டியதுடன், விஞ்ஞான ஆய்வுகூட வசதியை ஏற்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரப்பட்டது.
அத்தோடு குறித்த பாடசாலையில் தளபாடப்பற்றாக்குறை, கழிப்பறைத் திருத்தம் போன்ற குறைபாடுகளும் காணப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் குறித்த குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்து பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், நேரடியாகவும் பார்வையிட்டார்.
மேலும் கோரிக்கைகளை தம்மிடம் எழுத்துமூலமாக கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு நகர் பகுதியில் 14 வயதான பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியொன்றில் அறை எடுத்து அவளை துஷ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அத்துடன் அந்த சிறுவனுக்கு ஒத்தாசை புரிந்து அவனுக்கு அறை வாடகைக்கு கொடுத்த விடுதி முகாமையாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தின் ஊடாக அதிபர், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் உங்களின் பிள்ளைகள் தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டியது பெற்றோராகிய உங்களின் பொறுப்பு.
பௌத்த மக்கள் மிகவும் புனிதமாகப் போற்றும் வெசாக் வாரத்தில் மாடுகள் அல்லது ஏனைய விலங்குகளைப் பலியிடுவதானது தேவையற்ற சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இது குறித்து அரசாங்கம் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இஸ்லாமியர்கள் தமது ஹஜ் பெருநாளை மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடி வருகின்றனர். ஈதுல் பெருநாளைத் தொடர்ந்து அய்யாமுல் தஷ்ரீக் எனப்படும் மூன்று நாட்கள் தியாகத் திருநாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இஸ்லாமிய மார்க்கத்தின் படி அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் தியாகமாகவே இது கருதப்படுகிறது. இப்ராஹீம் நபியவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற அர்ப்பணிப்பினை நினைவுறுத்தும் வகையில், நீண்டகாலமாக அவர்கள் மாடுகள், ஆடுகள் அல்லது ஒட்டகங்களைப் பலியிடுவதை ஒரு புண்ணியச் செயலாகக் கருதிப் பின்பற்றி வருகின்றனர்.
எனினும், இவ்வாறான குர்பான் நிகழ்வுகளின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களில் அமைதியற்ற சூழல்கள் உருவானதை நாம் அறிவோம்.
குறிப்பாக 2013 ஆம் ஆண்டு கொலன்னாவை நகர சபைக்கு அப்போதைய மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவினால் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், இதனை பசு வதை புண்ணியச் செயல் எனக் குறிப்பிட்டிருந்த ஆவணம் என்னிடம் இப்போதும் உள்ளது. ஒரு விலங்கைக் கொன்று அதன் இறைச்சியைத் தமக்கும், ஏழைகளுக்கும், அயலவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதே அவர்களின் சம்பிரதாயம்.
தற்போதுள்ள சூழலில் வெசாக் வாரம் என்பது பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான காலப் பகுதியாகும். மக்கள் தான தர்மங்கள் செய்தும், தோரணங்கள் அமைத்தும், பௌத்த நடைமுறைகளைப் பின்பற்றியும் இப்புனித வாரத்தைக் கொண்டாடுகின்றனர்.
இம்முறை இஸ்லாமிய நாட்காட்டியின் படி மே மாதம் 30ஆம் திகதி ஹஜ் பெருநாளின் முக்கிய தினம் அமையும் எனத் தெரிகிறது. வெசாக் வாரம் மே 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்படி வெசாக் வார காலப்பகுதிக்குள் இந்தத் தியாகத் திருநாள் நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
பௌத்த தர்மத்தின் படி தம்மபதத்தில் அனைத்து உயிர்களும் தண்டனைக்கும் மரணத்திற்கும் அஞ்சுகின்றன. எனவே தன்னையே உதாரணமாகக் கொண்டு பிற உயிர்களைக் கொல்லவோ அல்லது கொலை செய்யத் தூண்டவோ கூடாது என்பதே அதன் பொருளாகும்.
தற்போதுள்ள சர்வதேச அரசியல் சூழலில், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், இணையத்தளங்கள் வாயிலாக மத ரீதியான கருத்துக்கள் ஆவேசமாகப் பரிமாறப்படுகின்றன. இவ்வாறான பின்புலத்தில் உள்நாட்டில் இத்தகைய செயற்பாடுகள் பாரிய மோதல்களுக்கு வித்திடக்கூடும்.
எனவே, வக்பு சபை மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் இணைந்து அரசாங்கம் இது குறித்து உரிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும்.
மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டிய அதேவேளை, நாட்டின் அமைதியைப் பேணும் வகையில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எழும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை ஒரு சமூகத்தின் பண்டிகைக் காலத்தில் இன்னொரு சமூகத்தின் பண்டிகை வரும்போது அவரவர் தமது நம்பிக்கையின் அடிப்படையில் பண்டிகையை பின்பற்றுவதில் உள்ள தடைகள் என்ன என்பதே எமக்கு முன்னுள்ள வினா.
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முச்சக்கர வண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (25) மாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன், தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதியதொரு டிஜிட்டல் மோசடி குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்தோ அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களின் பெயரிலோ வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஊடாக ஆபத்தான “apk” கோப்புகள் அனுப்பப்படுகின்றன.
இவை திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டண விபரங்கள் அல்லது பரிசுப் போட்டிகள் போன்ற பெயர்களில் வரக்கூடும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இவற்றை ஒரு புகைப்படம் என்றோ அல்லது PDF கோப்பு என்றோ நினைத்து கிளிக் செய்தால், அது உடனடியாக உங்கள் தொலைபேசியில் ஒரு மென்பொருளாக தானாகவே நிறுவிக் கொள்ளும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மென்பொருள் ஊடாக ஹேக் செய்பவர்கள் கைபேசியை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் தொலைபேசிக்கு வரும் SMS மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கான OTP இரகசிய குறியீடுகளை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் வங்கி கணக்கிலுள்ள பணம் முழுமையாக கொள்ளையிடப்படும் அபாயம் உள்ளது.
எனவே, அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு “apk” கோப்புகளையும் தரவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம்.
மென்பொருள்களைப் தரவிறக்கம் செய்ய எப்போதும் உத்தியோகபூர்வமான Google Play Store அல்லது Apple App Store ஐ மாத்திரம் பயன்படுத்துங்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், தொலைபேசி அமைப்புகளில் உள்ள “Install Unknown Apps” என்ற தெரிவை முடக்கி வைத்திருப்பதை உறுதி செய்யவும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான மோசடிக்கு உள்ளாகியிருந்தால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை முடக்குவதோடு, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக பிரித்தானியா சென்ற போது 16.2 மில்லியன் ரூபாய் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் கொண்ட நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இத்தகைய நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் ரீதியாக இம்முடிவுகள் அறிவிக்கப்படுவது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு ஜனாதிபதி தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டாலும் அவருக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், அதற்கான செலவுகளை நிதி முறைகேடாகக் கருத முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.டி. ஜயநாயக்க வாதிட்டார்.
அத்துடன் 650 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுத்திய பெரிய அளவிலான ஊழல்கள் விசாரிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகவே தெரிவதாகக் கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2029ம் ஆண்டிற்குள் வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தார்.
ஆண்டுதோறும் வீதி விபத்துகளினால் ஏற்படும் 2,700-க்கும் மேற்பட்ட மரணங்களை படிப்படியாகக் குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “சீரற்ற போதைப் பொருள் பரிசோதனையின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள்” (Principles and Practice of Random Drug Testing) என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில்,
“போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல பணிகளை முன்னெடுத்துள்ளது. நாம் எவ்வளவுதான் வீதிகளை மேம்படுத்தினாலும், நவீன வாகனங்களை இறக்குமதி செய்தாலும் அல்லது உள்கட்டமைப்பை மேம்படுத்தினாலும், முறையான பயிற்சியும் ஒழுக்கமும் இல்லாவிட்டால் சாலை பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.
ஆண்டுதோறும் இழக்கப்படும் 2,700-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது இலக்கு 2029ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை பெருமளவு குறைப்பதாகும்,” என்றார்.
கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, 15%-18% வரையிலான சாரதிகள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், வீதி விபத்துகளில் சுமார் 53% ஓட்டுநர் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஒழுக்கம் மற்றும் பயிற்சி இன்றி போக்குவரத்து பாதுகாப்பை நிலைநாட்ட முடியாது. போக்குவரத்து செயல் திட்டத்தின் (Transport Action Plan) கீழ் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. வெறும் யோசனைகளுடன் நின்று விடாமல், நாங்கள் அவற்றைச் செயற்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டிற்கு ஏற்ற தரமான பேருந்துகள் மற்றும் வாகனங்களை நாங்கள் இறக்குமதி செய்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டது.
வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு இலக்கம் 8 மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அந்த வழக்கில் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி, அந்த வழக்கின் நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த வழக்கிலும் பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
விடயங்களை ஆராயந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வழக்கை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி நிர்ணயித்தார்.
2009 மார்ச் 31ஆம் திகதியில் இருந்து 2013 டிசம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 வங்கிக் கணக்குகளில் பேணப்பட்ட 59 மில்லியன் ரூபாவை ஈட்டிய விதத்தை உறுதிப்படுத்தாமை காரணமாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டியான டேஸி பொரஸ்ட்டுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பிரதிவாதிகள் மீது 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிங்கள கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்குக் கடும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமல் ஜெயசிங்கே மீது குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘ராயல் சிங்களப் புத்தாண்டு விழா’ (Royal Sinhala New Year Festival) என்ற பெயரில் நடைபெற்ற கொண்டாட்டம் தொடர்பாக, ஜோதிட நிபுணர் குழு மற்றும் சிங்களப் பாதுகாப்பு முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று, இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
இளம் பெண்கள் தங்கள் அக்குள்களுக்கு அடியில் பிடித்துக் கொண்டிருக்கும் பாட்டில்களிலிருந்து இளைஞர்களை பீர் குடிக்க வைப்பது மற்றும் இளம் பெண்களின் வயிற்றின் மீது வைக்கப்பட்டிருக்கும் பணிஸ்களை இளைஞர்களைச் சாப்பிட வைப்பது போன்ற சமூக ஒழுக்கமற்ற விளையாட்டுகளை ‘தேசிய விளையாட்டுகளாக’ முன்னிறுத்தியதன் மூலம், சிங்கள கலாச்சாரத்திற்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டினர்.
இத்தகைய கண்ணியமற்ற நடவடிக்கைகளைத் தேசிய விளையாட்டுகளாகப் பிரபலப்படுத்த முயலும் அரசு சாரா நிறுவனங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் CID யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவுடன் (UNESCO) இலங்கை செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் படி, இது மிகவும் தீவிரமான ஒரு குற்றமாகும் என்று ஜோதிட நிபுணர் குழுவின் தேசிய அமைப்பாளர் திரு. ரவிசங்க சேனநாயக்க வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.