Sunday, August 16, 2026
Huis Blog

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” இறுதி நாள் நாளை..!

0

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் கடந்த வெள்ளி ஆரம்பமாகியது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் காணாமற் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

செம்மணி புதைகுழிக்கு நீதிகோரி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த போராட்டம், 16 ஆம் திகதி வரை செம்மணியில் இரவு பகலாக இடம் பெற்று வருவதுடன், நாளை 17 ஆம் திகதி யாழ்.நகரில் போராட்டம் ஆரம்பித்து நல்லூர் கோயில் வீதியிலுள்ள ஐநா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பதோடு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்துக்களை வழிநடத்தும் நேர்மையான தலைமைத்துவம் உருவாவது காலத்தின் கட்டாயம்..!

0

ஒவ்வொருவரினதும் ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

நமது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக உருவாகுவதற்கு அறநெறி பாடசாலைகளின் பங்களிப்பு அளப்பறியது என்றும் தெரிவித்தார்.

இந்து சமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு- 2025 நிகழ்வு இன்று (2026.08.16) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,“உண்மையிலேயே மனிதன் மனிதனாகவும், விழுமிய பண்புகளுடனும், சமூகத்திலே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பிரஜையாகவும் வளர்வதற்கு இந்த அறநெறி கல்வி இன்றியமையாததாக காணப்படுகிறது.

ஒழுக்கமுள்ளவனாகவும், இந்த சமூகத்திற்கு சேவை செய்யக் கூடியவனாகவும், ஒரு மனித நேயமிக்கதாகவும் இருப்பதற்கு அறநெறி கல்வி முக்கியமானதாகக் கருதப்படுவதால் பெற்றோருக்கு இருக்கும் தலையாய கடமைகளில் ஒன்று, தமது பிள்ளைகளை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதாகும்.

அதே போலத்தான் இந்த அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள், உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அவர்களுக்கு பெரிய கொடுப்பனவு ஒன்றும் கிடையாது. எனினும் அவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும், அவர்களுடைய ஏனைய வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அவர்கள் இந்த அறநெறி கல்வியை போதிப்பது சாதாரண ஆசிரியர் என்று கூற முடியாது. இவர்கள் இந்த சமூகத்தை செதுக்குகின்ற சிற்பிகள் என்றார்.

எமது சமயத்தை வளர்க்க வேண்டும் என்றால், எங்களுடைய சமயத்தினுடைய தொன்மை, உண்மை தன்மையை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வது மிக மிக அவசியம். அதற்காக இந்த அறநெறி கல்வியை நாங்கள் வலுப்படுத்த வேண்டும்.

அதேப்போல இந்து மக்களை வழிநடத்துகின்ற, நேர்மையான தலைமைத்துவம் உருவாவது காலத்தின் கட்டாயம். யாரும் எங்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் அளவுக்கு நாங்கள் வந்துவிடக் கூடாது.

இதற்காக முழு இலங்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமைப் பீடம் உருவாக வேண்டும். தான் அதற்கு ஒரு திறந்த அழைப்பினை மேற்கொள்கிறேன் என்றார்.

எல்லோரும் ஒற்றுமையாகப் பயணிக்கின்ற பொழுதுதான் நாங்கள் எங்களுடைய மதத்தினுடைய தொன்மையை பாதுகாக்க முடியும். இல்லையென்றால், எல்லாவற்றிலும் இருந்து மறைந்து விடுவோம் என்றும் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவை இழக்கிறதா அரசாங்கம்; ஆய்வில் வெளியாகிய தகவல்..!

0

அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு தேர்தலுக்குப் பிந்தைய உச்சநிலையான 65 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைந்துள்ளது என்று வெரிடே ரிசர்ச் நிறுவனத்தால் நடத்தப்பட்ட அண்மைய ‘Mood of the Nation’ தொடர்பான கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2026 இல் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பின்படி, கடந்த பெப்ரவரியில் 65 சதவீதமாக பதிவான அரசாங்கத்திற்கான ஆதரவு கணிசமாகக் குறைந்து, தற்போது 49.83% ஆகப் பதிவாகியுள்ளது.

பொருளாதார முன்னேற்றம் குறித்த மக்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என அக்கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதார மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், வெரிடே ரிசர்ச்சின் ‘பொருளாதார நம்பிக்கைச் சுட்டெண்ணையும்’ (Economic Confidence Index) எதிர்மறை நிலைக்குத் (Negative territory) தள்ளியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் -39 ஆக இருந்த இச்சுட்டெண், 2025 பெப்ரவரிக்குப் பின்னர் நேர்மறை நிலைக்கு நகர்ந்து,அண்மைய கணிப்பில் இச்சுட்டெண் -8 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த கருத்து கணிப்பில், பொருளாதார நிலைமைகள் மேம்பட்டு வருகின்றன என்று நம்பும் பதிலளிப்பாளர்களின் எண்ணிக்கை, முந்தைய கணிப்பில் 64% ஆக இருந்த நிலையில் தற்போது 41.63% ஆகக் குறைந்துள்ளது.

அதேவேளை, பொருளாதாரம் “மோசமடைந்து வருகிறது” என்று நம்புபவர்களின் சதவீதம், முன்னர் இருந்த சுமார் 15%-உடன் ஒப்பிடுகையில் தற்போது 40.29% ஆக உயர்ந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், அதாவது 55.59% பேர், தற்போதைய பொருளாதார நிலையை “மோசமானது” என மதிப்பிட்டுள்ளனர்.

வெறும் 38% பேர் மட்டுமே பொருளாதார நிலைமை “நல்லது” அல்லது “மிகச் சிறந்தது” எனக் கருதுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை; மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை..!

0

பெற்றோர் அல்லது அதிபரின் அனுமதியின்றி சிறுவர்களிடம் பெறப்படும் கருத்துகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது ஊடகங்களில் வெளியிடுவதற்கோ கல்வி அமைச்சு கடுமையான தடையை விதித்துள்ளது.

இவ்வாண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய சிறுவர்கள் சிலர், ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவர்கள் கிண்டலுக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுந்த கரிசனைகளைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை முடிந்த பின்னர் சிறுவர்கள் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பரிகாசத்திற்கு உள்ளாக்கும் வகையில் சுட்டிக்காட்டப்பட்டுப் பகிரப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோர், உத்தியோகபூர்வ பாதுகாவலர்கள் அல்லது அதிபர்களின் எழுத்துமூல முன் அனுமதியைப் பெறாமல் சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிறுவர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இத்தகைய காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

வவுனியாவிலும் நாளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்..!

0

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை 17ம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை இதற்கு சமாந்தரமாக வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு எதிரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணசபை முன் நாளை போராட்டம்..!

0

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை 17ம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் வி.விஜயரூபன்,

வட மாகாணத்திலே பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கக் கூடியவர்கள், அவர்களின் கீழான பிறிதொரு பதவி அணியினரை மிகவும் தரக்குறைவாக, இழிவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அவர்களுக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை செய்திருக்கிறார்கள்.

பிரதம செயலாளருடைய தலைமையில் கடந்த 7ம் மாதம் 7ம் திகதியன்று கூட்டப்பட்ட துறைசார் மீளாய்வுக் கூட்டத்தின் போது, அரச நிதியைப் பயன்படுத்தி, ஒரு அரச கடமை நேரத்திலே, ஒரு தொழில் பகுதியினரை மிக தரக்குறைவாக பேசிய சம்பவம் தொடர்பாக எங்களுடைய உத்தியோகத்தர்கள் பாரிய மன அழுத்தத்தோடு உள்ளார்கள்.

அந்த இடத்திலே இந்த விடயத்தைப் பேசிய நிர்வாக சேவை அதிகாரிகளிடம் நாங்கள் சொல்லிக்கொள்வது, இன்றைக்கு இலங்கைத் தீவிலே அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தவிர்த்து எந்தவொரு செயற்பாட்டையும் செய்ய முடியாது என்ற நிலை நிலவுவது இந்த நாட்டிலே இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கும் தெரியும், ஒட்டுமொத்த அரச இயந்திரத்துக்கும் தெரியும்.

இந்த மாகாண சபையினுடைய நிர்வாகக் கட்டமைப்பிடம் நாங்கள் ஒரு பலமான செய்தியை முன்வைத்து, எதிர்வரும் திங்கட்கிழமை நாங்கள் ஒரு போராட்டத்தை செய்யவிருக்கின்றோம்.

எங்களுக்கு தாபன விதிக்கோவையில் அளிக்கப்பட்டிருக்கக்கூடிய ஏற்பாடுகள், இந்த நாட்டின் அரசியலமைப்பிலே சொல்லப்பட்டிருக்கக் கூடிய ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு முற்று முழுதான தகுதியும், அதற்கான முழு உரிமையும் எங்களுக்கு இருக்கிறது.

இந்த போராட்டத்தின் போது நீங்கள் முழுப்பேரும் ஒன்றுபட்டு, அன்றைய தினம் உங்களுடைய பலமான எதிர்ப்பை பதிவு செய்யக்கூடிய வகையில் நீங்கள் சுகயீன விடுப்பை எந்தெந்த வழிகளில் உங்களுடைய மேலதிகாரிகளுக்கு அனுப்ப முடியுமோ, அந்த முறைகளில் உங்களுடைய விடுப்புகளை விடுமுறைகளை அறிவித்து, முறையாக நீங்கள் வீட்டிலே தங்கியிருந்து இந்த பலமான எதிர்ப்பைக் காட்டுகின்ற அதே சமயம், மாகாண சபை கைதடியில் அமைந்திருக்கக்கூடிய மாகாண சபைக்கு முன்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை அன்றைய தினம் செய்யவிருக்கிறோம்.

ஆகவே, அன்று விடுப்பை அறிவிக்கின்ற உத்தியோகத்தர்கள் நீங்கள் கட்டாயமாக அந்த மாகாண சபைக்கு முன்னால் 8 மணிக்கு முன்னதாக ஒன்றுகூடி எங்களுடைய பலமான எதிர்ப்பினை நாங்கள் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

ஆகவே, இந்த போராட்டம் வருகின்ற திங்கட்கிழமையோடு நின்றுவிடப் போவது அல்ல. இதையும் தாண்டி நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவோடு கலந்துரையாடி வருகின்றோம். அந்தத் தளத்திலும் இந்த மேலதிகாரிகளுக்கு எதிரான செயற்பாடுகள் எங்களால் முன்னெடுக்கப்படும்.

உங்களுக்கு யாராவது சவால் ஏற்படுத்தக்கூடிய திணைக்களத் தலைவர்கள் இருப்பார்களாக இருந்தால், அவர்களுடைய குரல் பதிவுகளையும் அவர்கள் சார்ந்த விபரங்களையும் ரகசியமாக எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவர்களை பொதுவெளியில் தோலுரித்துக் காட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – என்றார்.

கரைத்துறைப்பற்று உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைது..!

0

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை – கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட ஐவர், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கிளாய் பொலிஸார் நேற்று (15) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட உபதவிசாளர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனம் ஊடாக சபைக்கு தெரிவாகி, பின்னர் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக் கூடுகள் அடையாளம்..!

0

செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 53ஆவது நாளான இன்று 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, இதுவரை 107 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 562 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றச் சோதனைகளில் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் கைது..!

0

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளில், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ரடம எகட’ (நாடொன்றாக இணைந்து) தேசிய நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர், கடந்த 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் 2 சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் கைது நடவடிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

பரீட்சை மைய கற்றலைத் தாண்டிச் செல்வதே கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கம் – பிரதமர்

0

பரீட்சையை மையமாகக் கொண்ட கற்றல் முறையிலிருந்து விலகி, திறன்கள், படைப்பாற்றல், அனுபவரீதியான கற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இலங்கையின் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இடம்பெற்ற, ஃபுல்பிரைட் நிபுணர் கலாநிதி பிரியான்வதா அபேவிக்ரம நிகழ்த்திய “250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American” என்ற பகிரங்க விரிவுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வானது, 1952 ஆம் ஆண்டு முதல் கல்வி, கலாசார மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான பரஸ்பர புரிதலையும் அமைதியையும் மேம்படுத்தி வரும் ஒரு தன்னாட்சி ஈர்-தேசிய ஆணையமான இலங்கை – அமெரிக்க ஃபுல்பிரைட் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பரீட்சைகள் மீதான அதிகப்படியான தங்கிவாழும் தன்மையைக் குறைத்து, செயற்பாட்டு வழிக் கற்றல் மற்றும் அனுபவரீதியான கற்றலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அம்சம் மதிப்பீட்டு முறையைச் சீர்திருத்துவதாகும் என பிரதமர் கூறினார்.

கல்வி ரீதியாக வெற்றியடைந்த பல தலைமுறை இலங்கையர்களை உருவாக்கிய தற்போதைய கல்வி முறையின் பலங்களை இச்சீர்திருத்தங்கள் நிராகரிக்காது என்றும், மாறாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரு பாதைகளும் சமமான அங்கீகாரத்தையும் செல்லுபடியாகும் தன்மையையும் பெறுவதை உறுதிசெய்யும் அதே வேளையில், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களிடையே டிஜிட்டல் எழுத்தறிவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சீர்திருத்தச் செயல்பாட்டில் கலாநிதி அபேவிக்ரமவின் ஒரு மாத கால பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நிபுணத்துவமும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

ஃபுல்பிரைட் ஆணைக்குழு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுகலை நிறுவனம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் இந்த முயற்சியை ஆதரித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் பங்காளிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கைக்கு அனைவரையும் உள்ளடக்கிய, நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையைக் கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

error: Content is protected !!