இன்றைய தினம் பாராளுமன்றத்தில் மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்து பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன இதன் போது பதிலளிக்கையில்,
மிகை ஊழியர் அதிபர்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தில் தேசிய பாடசாலையில் ஒருவரும், மாகாண பாடசாலைகளில் 52பேருமாக மொத்தம் 53மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
அதேவேளை தீவளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் 06பேரும், மாகாணப் பாடசாலைகளில் 631பேருமாக மொத்தம் 637 மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
கடந்த 2012.08.08ஆம் திகதி முதல் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிருக்கின்ற அதிபர்களின் நியமனக் கடிதங்களுக்கு அமைவாக, அவர்களுக்கு அதிபர்களுக்கான சம்பளத்தினை மாத்திரமே பெற்றுக்கொள்ள வாய்பிருக்கின்றது.
நிர்வாக கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள் அவர்களுக்கில்லை. எனவே மிகை ஊழியர் அதிபர்களுக்கு ஏதேனுமொரு வகையில் நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சினால் ஆராயப்பட்டது.

எனினும் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிப் பிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை. அதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
ஆனாலும் நாம் தற்போது மிகை ஊழியர் அதிபர்களுடன் கலந்துரையாடி யிருக்கின்றோம். உத்தியோகத்தர்கள் மட்டத்திலும் கலந்துரையாடியிருக்கின்றோம். அத்தோடு அரசசேவைகள் ஆணைக்குழுவிடமும் இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.
உண்மையில் மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கணிசமான பணிகளை ஆற்றுகின்றனர். அனைத்து விடயங்களும் எம்மால் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை அதிபர்களை இடமாற்றும் போது மாகாண மட்டத்தில் சில பிரமாணங்கள் இருக்கின்றன. சில பாடசாலைகளில் 15 தொடக்கம் 20ஆண்டுகளாக அதிபர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
உரியமுறையில் அதிபர்களை கோராத வரையில் அதிபர் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படுவதுமில்லை.
அரச சேவைகள் ஆணைக்குழுவுடன் எதிர்வரும் 11ஆம்திகதி பேச இருக்கின்றோம். அதிபர் நியமனங்களைக் கோராத பாடசாலைகளுக்கு எவ்வாறு அதிபர்களை நியமிப்பது என்பது பற்றி பேசவிருக்கின்றோம் – என்றார்.


Recent Comments