அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கடுமையான இதய நோய் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவியான மனோரி சலே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனது கணவரின் கடுமையான இதய நோய் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலில் இருந்து அகற்றி எனது கணவரை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும், அவரது உயிருக்கு உடனடி மற்றும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனது கணவரைத் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கும் சிறை வைப்பதற்கான சூழ்நிலைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து அவர் முன்னெடுத்த உணவு விடுப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைகளுக்காக 2026 ஜூன் 7 ஆம் திகதி அவர் இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அன்றிலிருந்து அவர் இதயவியல் பிரிவின் விசேட வைத்தியர்களின் கண்காணிப்பிலும் சிகிச்சையிலும் இருந்து வருகிறார்.
இதயச் செயல்பாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான செயலிழப்பு மற்றும் கடுமையான பலவீனம் காரணமாக, எனது கணவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதன்போது அவரது இதயத்தில் தானியங்கி இதயத் துடிப்பு சீராக்கி பொருத்தப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு நெருக்கமான, தொடர்ச்சியான மற்றும் விசேட மருத்துவக் கண்காணிப்பும் கவனமும் அத்தியாவசியமாக உள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவை மேலும் நீடிப்பதும், இலங்கை தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலில் இருந்து அவரை அகற்றி மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்க முயற்சிப்பதும், அவரது உயிருக்கு உடனடி மற்றும் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.
எனவே, தற்போது நடைமுறையிலுள்ள தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியான பிறகு அதனை மீண்டும் நீடிக்க வேண்டாம் என்று நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.
சட்டப்பூர்வமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கவோ, அதனைத் தாமதப்படுத்தவோ அல்லது தலையிடவோ எனது கணவருக்கோ அல்லது குடும்பத்தினர் எவருக்கும் எந்தவொரு எண்ணமும் இல்லை.
சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


Recent Comments