இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஈரான் துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக ‘TankerTrackers’ இணையதளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை (‘Shadow Fleet’) கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக ‘TankerTrackers’ இணையதளம் கூறுகிறது.
எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும்.
அதேவேளை கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த ‘ஐரிஷ் டேனா’ (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் ‘TankerTrackers’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.


Recent Comments