வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, அவர்களின் உறவுகளினால் ஞாயிற்றுக் கிழமை (30) யாழில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டில் வலிந்து அல்லது பலவந்த காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பன முன்னெடுக்கப்படும்.
அதற்கமைய இவ்வருடமும் இன்றைய தினம் (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பட்டில் ‘நீதிக்கான நீள்பயணம்’ எனும் மகுடத்தில் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக் கூறலைக் கோரும் தமிழ்த் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு யாழ், தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ளது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரான காலப் பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ள இருப்பதுடன் விசேடமாக வலிந்து அல்லது பலவந்த காணாமலாக்கப் படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களுக்கான நீதி உள்ளடங்கலாக கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக் கோரவுள்ளனர்.
அதேவேளை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (30) காலை 9.00 – 11.00 மணி வரை கிளிநொச்சி, ஏ9 வீதியில் உள்ள கோவிலுக்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்து, கற்பூரச்சட்டி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நீதிக்கான போராட்டத்தை ஆவணப்படுத்தும் நூலொன்றும் வெளியிடப்படவுள்ளது.


Recent Comments