இலங்கையில் போதைப் பொருள் மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக நாள் தோறும் 80 முதல் 100 வரையிலான நபர்கள் உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“ரட்ட ம ஏ கட்ட” (நாடொன்றாக இணைந்து) என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் இன்று (28) நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையில் நாள்தோறும் இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமையும் வேறு எந்தவொரு தனிப்பட்ட காரணியும் இல்லை என்றும் கலாநிதி பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
நாட்டில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய உயிரிழப்புகளில் புகைப்பிடித்தலே முதன்மையான காரணியாக விளங்குவதாக அடையாளம் காட்டிய அவர், மதுபான நுகர்வு மட்டுமே நாளொன்றுக்கு அண்ணளவாக 10 முதல் 15 உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.
மேலும், சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக எச்சரித்த அவர், சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டிற்கான பாதை பெரும்பாலும் சட்ட பூர்வமாகக் கிடைக்கக் கூடிய பொருட்களிலிருந்தே தொடங்குகிறது.
அத்துடன் “ஹெராயின் பயன்படுத்தும் பல நபர்கள், அதை உபயோகிக்கத் தொடங்குவதற்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர் என்பதைக் காட்டுவதற்குப் போதிய சான்றுகள் உள்ளன” என்று கலாநிதி பெர்னாண்டோ தெரிவித்தார்.
கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர் அதற்கு முன்னர் மதுபானம் அல்லது சிகரெட்டைப் பயன்படுத்தியவர்கள் என்றும், இது வெவ்வேறு போதைப் பொருட்களின் பயன்பாட்டிற்கு இடையிலான தொடர்பை வெளிப்படுத்துகிறது
“இலங்கையில் இந்த நச்சுப் பொருட்களுக்கான கதவைத் திறந்து விடும் முக்கிய போதைப் பொருளாகப் புகைப்பிடித்தலே அமைகிறது. ஹெராயின் பயன்படுத்தும் பல நபர்கள் ஹெராயினுக்கு முன்பாகச் சிகரெட் பயன்படுத்தியிருந்தனர் என்பதற்கும், அதேபோல் கஞ்சா பயன்படுத்தும் பலர் அதற்கு முன்னர் மதுபானம் அல்லது சிகரெட்டைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.


Recent Comments