Wednesday, June 10, 2026
Huisதாயகம்உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு - பீமல் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு – பீமல் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளியாகும் போது ஒரு தரப்பினர் பிரதான சூத்திரதாரியையும், தாக்குதலுக்கு உளவு பார்த்தவர்களையும் பாதுகாக்க போராடுகிறார்கள். உண்மையில் நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும்.

ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக இடையூறு விளைவிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் விசாரணைகளை இடைநிறுத்தப் போவதில்லை. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கோட்டபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டது. 2019.04.21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. 2019.04.23 ஆம் திகதி தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முழுமையாக வீழ்ச்சியடைந்தது.பொருளாதார பாதிப்புக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும். கத்தோலிக்க மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகளாக அடையாளப் படுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வெறுப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறான பின்னணியில் தான் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

சுரேஸ் சலே நாடகம் தற்போது அரங்கேற்றப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்த நபர் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கும், சுரேஸ் சலேவுக்கும் இடையில் தொடர்புண்டு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளியாகும் போது ஒரு தரப்பினர் பிரதான சூத்திரதாரியையும், தாக்குதலுக்கு உளவு பார்த்தவர்களையும் பாதுகாக்க போராடுகிறார்கள்.

 

உண்மையில் நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும். ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக இடையூறு விளைவிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் விசாரணைகளை இடைநிறுத்தப் போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் செல்கிறார்.அப்போது அவர் பரிவாரங்களுடன் நீதிமன்றம் செல்லவில்லை. ஆனால் ராஜபக்ஷர்களும், ரணில் விக்கிரமசிங்கவும் நீதிமன்றம் செல்லும் போது பரிவாரங்களுடன் செல்கிறார்கள். சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் இடம்பெறுகிறது. கோட்டபய ராஜபக்ஷவுக்கு பயணத்தடை விதிக்கும் வரை ஆரோக்கியமாக இருந்த சுரேஸ் சலே பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னர் நோயாளியாக மாறிவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இவர்களுக்கு முழுமையான சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பல போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். வங்குரோத்து நிலையடைந்த அரசியல்வாதிகளும் அவருக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நாட்டு மக்கள் இவர்களை ஒரு போதும் கவனத்திற் கொள்ள போவதில்லை. வெகுவிரைவில் உண்மை வெளிவரும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!