Wednesday, June 10, 2026
Huisதாயகம்ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக - ரவிகரன் எம்.பி கோரிக்கை

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன் எம்.பி கோரிக்கை

இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த கோரிக்கையை உரியவகையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற குழு அறையில் 09.06.2026இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் ஓர் புனித நாளாகும்.

இந்த ஆடி அமாவாசை புனித நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்காக, குறிப்பாக இறந்த தந்தையர்களுக்காக விரதமிருந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து தமதுபிதிர்க்கடன்களை நிறைவேற்றி ஆசி பெறுகின்றனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்திற்கு பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.

இருப்பினும் இந்த நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்த பிற்பாடு இந்துக்களின் இந்த புனித தினத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படுவதில்லை.

அந்த வகையில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த கடந்தகால ஆட்சியாளர்கள் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான தமது வழிபாட்டிரிமையை மறுத்து வந்துள்ளதாகவே இந்துக்கள் கருதுகின்றனர்.

மாதம் தோறும் பௌர்ணமிக்கு விடுமுறை வழங்கும் இலங்கை அரசு, வருடத்தில் ஒரு நாள் வருகின்ற ஆடி அமாவாசைக்கு பொது விடுமுறை வழங்க தவறியிருப்பது இந்துக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆகவே இந்துக்கள் தமது புனிதநாளான ஆடி அமாவாசை தினத்தில் இடர்பாடுகளின்றி, நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எனவே இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை நாளாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில் இதன்போது புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் பதிலளிக்கையில்,

சமயரீதியாக இந்த விடயங்களைக் கையாள்வதற்கென குழுவொன்று உள்ளது. அந்தவகையில் ஆடி அமாவாசை புனித நாளினை அரச விடுமுறையாக பிரகடனப்படுத்துதல் என்ற விடயம் அந்தக் குழுவிற்கு பாரப்படுத்தப்படும்.

அதற்கமைய அந்தக்குழுவில் இந்த ஆடி அமாவாசை புனித நாளினை பொது விடுமுறையாக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

அதன் பின்னர் அந்தக்குழுவின் பரிசீலனை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!