கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையாகும், மாறாக அதுவொரு சலுகை அல்ல. பிள்ளைகள் கல்வியைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ‘நண இசுர’ புலமைப் பரிசில் திட்டம் பெரும் பக்கபலமாக அமைகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்போட சிரி ஞாணிஸ்ஸர தேரரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘நண இசுர – 2026’ புலமைப்பரிசில் வழங்கும் விழா ஞாயிற்றுக் கிழமை (2) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரச் சிரமங்கள் இருந்த போதிலும் தளராது உயர்தரம் வரை முன்னேறிச் செல்லும் இந்தப் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்குவதற்கு இந்த உதவித்தொகை பெரும் பக்கபலமாக அமையும்.
தற்போது நாட்டின் கல்வித் துறையில் பாரிய மாற்றத்தையும் புதிய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை அறிவீர்கள்.
கல்வி என்பது எந்தவொரு பிள்ளைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையே தவிர,அதுவொரு சலுகையாக இருக்கக் கூடாது என்பதே அரசாங்கம் என்ற ரீதியில் எமது தெளிவான தொலைநோக்காகும்.
நாட்டின் பொருளாதாரச் சிரமங்கள் எவ்வாறிருந்த போதிலும், பிள்ளையொருவரின் கல்விக்காகச் செய்யப்படும் முதலீடானது இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகச் செய்யப்படும் மிகச்சிறந்த மற்றும் மகத்தான முதலீடாகும். நம்மிடம் உள்ள மிக வலுவான வள மனித வளமேயாகும்.
அரசாங்கம் என்ற ரீதியில் கல்வித் துறைக்காகப் பல முக்கிய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் இலவசக் கல்வியைப் பாதுகாத்தல் என்பவற்றிற்காகப் பாடத்திட்டங்களைப் புதுப்பித்து, தற்போதுள்ள பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைமைக்கு பதிலாகப் பிள்ளையின் திறமைகள், அவதானிக்கும் ஆற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படச் செய்யும் நடைமுறைச் சாத்தியமான கல்விச் சூழலை உருவாக்குவதே எமது முதன்மை நோக்கமாகும்.
அத்துடன், புத்தகங்களுக்கு மட்டும் வரையறுக்கப்படாமல் நாட்டுக்குத் தேவையான நேர்மறை மனப்பாங்குகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்ட கல்வி முறையை உருவாக்க நாம் விரும்புகிறோம்.
கிராமப்புற மற்றும் நகரப் பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகக் கிராமப்புறப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த அதிக நிதியை ஒதுக்கியுள்ளோம். ஏனெனில் நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தாலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

அதேபோல், நீண்டகாலமாகச் சரியான திட்டமிடல் இன்றிச் செயற்படுத்தப்பட்ட கல்வி முறைமையினால், பரீட்சைகளை நடத்துவதிலும் முடிவுகளை வெளியிடுவதிலும் சிக்கல்கள் எழுந்தன. இன்று உரிய அட்டவணையின்படி முறைமையாகக் கல்வித் துறையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்கு உங்களது ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவையாகும்.
எமது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினூடாகப் பாடசாலைக் கல்விக்குப் பிறகு ஒரு பிள்ளை வழிகாட்டுதலன்றித் தவிப்படையாமல், தொழில் சார்ந்த அல்லது உயர்கல்வியை நோக்கிச் செல்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் வாய்ப்புகளையும் நாம் விரிவுபடுத்தி வருகின்றோம்.
கல்வித் துறையின் மனித வளத்தில் முதலீடு செய்வதுடன், பாடசாலை மதிய உணவு, பாடப்புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்கள் மூலம் வறுமையான குடும்பங்களின் பிள்ளைகள் கல்வியைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
கல்வியால் ஆயுத பாணியாக்கப்பட்டு, இந்த நாட்டைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் கருணையுள்ள, நல்லொழுக்கமுள்ள பிரஜைகளாக மாற உறுதி பூணூமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.


Recent Comments