ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த கைது இடம் பெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்குள்ள ஜனநாயக உரிமை, நாமல் ராஜபக்ஷவுக்கும் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எனவே, அரசியல் நோக்கங்களுக்காக அரச நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்க் கட்சியினரை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாட்டின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


Recent Comments