இந்தியாவிலுள்ள முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள், மீண்டும் நாடு திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்திர வதிவிட பிரதிநதி மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம் திரும்புவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கையர்கள் தாங்களாகவே முன்வந்து நாடு திரும்புவதற்கான நடைமுறைகள் குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வரவேற்பதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கும் மறுவாழ்வு பெறுவதற்கும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்திர வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் தெரிவித்துள்ளார்.


Recent Comments