ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி பாதுகாப்புத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் (Permanent Trial-at-Bar) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக நடைபெற்ற விசாரணையொன்றின்போது, வழக்குத் தொடுநர் தரப்பு நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஷ் என்று அழைக்கப்படும் முரளியை மீண்டும் சாட்சியமளிக்க அழைக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது.
இதற்கு பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், வழக்குத் தொடுநர் தரப்பின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, குறித்த சாட்சியை மீண்டும் அழைப்பதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு விசேட நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனுவின் பிரதிகளும் விசேட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


Recent Comments