இலங்கையில் விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மை தொடர்பில் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாகவும் எரிபொருள் தரத்தை ஒழுங்குபடுத்த புதிய கனிம எண்ணெய் தொழிற்துறை சட்டமூலம் அவசியம் எனவும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பிரதானமாக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் தரம் தொடர்பில் மக்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் உத்தரவாதமும் இல்லை. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் பெட்ரோலுக்கான தரச்சான்று 595 என்றும் டீசலுக்கான தரச்சான்று 1103 என்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தரநிலைகள் சட்ட பூர்வமாக்கப்படாத காரணத்தினால், இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப் பூர்வமான கட்டமைப்பு எதுவும் நாட்டில் இயங்கவில்லை.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தின் 24ஆம் பக்கத்தில், எரிபொருள் தரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை அந்த வாக்குறுதிகள் ஏட்டுச் சுரைக் காயாகவே காணப்படுகின்றன. இதனால் தற்போதைய அரசாங்கம் ஒரு கனவு உலகத்தை உருவாக்க முயற்சிப்பதாகத் தோன்றுகிறது.
பொருளாதார ஒழுங்குமுறை, தொழில்நுட்ப ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறை என மூன்று முக்கிய அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.
பொருளாதார ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்த அரசாங்கமும் நிதி அமைச்சரும் தயக்கம் காட்டினாலும், குறைந்தபட்சம் தொழிநுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரங்களையாவது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தரமற்ற எரிபொருள் பயன்பாடு காரணமாக நாட்டில் உள்ள வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகின்றன. இதனால் வாகன உரிமையாளர்கள் அதிக பராமரிப்புச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
உயர்தர எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனங்களின் எஞ்சின் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், பயணிக்கும் தூரமும் அதிகரிக்கும். இதன் மூலம் எரிபொருள் இறக்குமதிச் செலவையும் நாட்டின் செலவீனத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும்.
எனவே, இந்த விவகாரத்தில் கனிம எண்ணெய் வளங்கள் அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு புதிய கனிம எண்ணெய் தொழிற்துறைச் சட்டமூலத்தைக் கொண்டுவர வேண்டும்.
ஒருவேளை புதிய சட்டமூலத்தைக் கொண்டுவரத் தாமதமானால், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்தாவது இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது தொடர்பான கோரிக்கை மனுக்களை கனிம எண்ணெய் வளங்கள் அமைச்சுக்கும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் தங்களது சங்கம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Recent Comments