Thursday, August 27, 2026
Huisதாயகம்இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் – பொலிசார் அவசர எச்சரிக்கை

இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் – பொலிசார் அவசர எச்சரிக்கை

பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவ்விடயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த அபாயகரமான நிலைமை குறித்துப் பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போது இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!