செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனிதப் புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 585 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது“ என தெரிவித்தார்.


Recent Comments