“தமிழ் தேசியமும் தமிழர்களின் மூச்சும்தான் எனது அரசியல் பாதை, மேதகுவே எனது தலைவர், நாம் ஒரு கனவு கண்டோம் என பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி சபைக்குள்ளே கூவியபடி” பலவாறான உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் வடக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு கோரிய சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் அண்மைக் காலமாக திசைமாறியுள்ளது.
தமிழில் தென்னிலங்கையின் முன்னாள் அரசியல்வாதிகளை படுகொலையாளிகள் எனவும், சிங்கள மொழியில் “மெத்திதுமா” என்ற புகழாரம் சூட்டுவதும் ஊடகத்தின் முன் உமிழப்படும் வார்த்தைகள் வேறு, அரசியல் களத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வேறு என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
நேற்று அனுரவிடம், டக்ளசிடம் சென்றேன், நாளை சஜித் ஜனாதிபதியானால் அவரிடமும் நான் செல்வேன், 2029ல் நாமலை அரியணை ஏற்றுவேன் என்றும் மிக வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கொள்கை, கோட்பாடு என்பதைத் தாண்டி, ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களின் காலடியில் தஞ்சமடைவதுதான் இவ்வளவு காலமும் ரவிராஜ் உட்பட பலர் உயிர் கொடுத்து கட்டிக் காத்த தமிழ் தேசிய அரசியலா?
அரசியலில் நிலைப்பாடுகள் மாறுவது புதிதல்ல. ஆனால், தேர்தலுக்கு முன் மக்களிடம் முன்வைக்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளுக்கும், தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உருவாகும் போது, அது அரசியல்வாதியின் கொள்கை மாற்றமா அல்லது சந்தர்ப்பவாத அரசியலா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அவரின் தற்போதைய கொள்கையற்ற, சமூக நோக்கற்ற அரசியல் அறமற்ற நடவடிக்கைகள் இதே கேள்வியை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் தேசிய அரசியலின் பாரம்பரியக் கட்சிகளையும், அதன் தலைமைகளையும் மிகக் கீழ்த்தரமாக வசைபாடி, எமது மக்களிற்கான மாற்று அரசியல் பாதையை உருவாக்குவேன் எனக் கூறிய ஒருவர், இன்று தமிழ் மக்களின் அரசியல், உணர்வுகளுடன் விளையாடியபடி, தமிழின விரோத போக்குடன் கடந்த காலத்தில் மிக மோசமாக செயற்பட்டவர்களுடன் தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தோன்றுவது எந்த வகையான அரசியல் நாகரீகம்?
இறுதியாக நடைபெற்ற தேர்தல்களில் அநுர அரசை வெற்றி பெறச் செய்து அழகுபார்த்த வடக்கு கிழக்கு மக்கள் இன்று இந்த அரசாங்கம் நாம் இலங்கையர்கள் என்ற கோசத்துடன் ஒருதலைப் பட்சமாக தமிழர்களின் காணி, சமயம், கலாசாரத்தில் கைவைத்துள்ளமை மட்டுமன்றி இன விகிதாசாரத்தை மாற்றி தமிழர் தாயகத்தில் கடந்த கால அரசாங்கள் போலவே தமிழரை இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்ல முயல்வதால் இன்று அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த மக்களின் வாக்கில் பதவிக்கு வந்து தன்நிலை மறந்த சுயேட்சை பாரளுமன்ற உறுப்பினர், நீதிக்கான, உரிமைக்கான, கண்ணீருக்கான பதில்களை தேடுவதை தாண்டி அதற்கு காரணமான கயவர்களின் காலடியில் சென்று மண்டியிட்டுள்ளார்.
அரசியலில் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம். ஆனால் கொள்கை மாறுதல் அரசியல் அறமற்றது.
ஆனால், குறித்த ஒரு அரசியல்வாதியின் அரசியல் பயணம் இன்று வரை ஆரம்ப நிலையில் உள்ள நிலையில், தனது செலவுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் கைகளையே நம்பியிருக்கும் இவரது தற்போதைய அரசியல் நகர்வுகளை பார்க்கும் போது அவரின் கொள்கை மாற்றம் என்பது அவரின் தனிப்பட்ட பொருளாதார, அரசியல் நலன்களை எவ்வாறாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் சார்ந்தது என்பது தெளிவாக புலப்படும்.
ஒரு இனம் சார்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியின் மிகப்பெரிய பலம் அவரது பதவியல்ல. அவரைத் தெரிவு செய்த மக்களின் நம்பிக்கையே. அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அரசியல் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்க வேண்டியது அவசியம்.
ஆனால் வடக்கின் முதலமைச்சர் கதிரைக்காகவும் வாழ்நாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வலம் வரும் ஆசைக்காகவும் வாக்களித்த மக்களினை முட்டாளாகக் கருதி இவர் போன்று செயற்படும் குள்ள நரிகளை இனங்காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.


Recent Comments