யாழ். ஊர்காவற்றுறையில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் பின்னர் நையப்புடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் குறித் நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
பலர் சமரசம் செய்ய முயன்ற போதும் அதனை ஏற்க மறுத்து டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டார்.
இதையடுத்து கூடியிருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டினர். அந்தப் பகுதியில் பிரச்சார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் அந்த நபரின் இல்லத்துக்கு வானில் சென்ற சிலர் அவரை நையப்புடைத்தனர்.
இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Recent Comments