Friday, January 23, 2026
HuisBreakingபிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல்; தலைமறைவான எம்.பி..!

பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல்; தலைமறைவான எம்.பி..!

நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர் பிரதேச சபைக்குள் உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தி இருந்தது.

இந்த சம்பவத்தில் தலைமறைவாகிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (10) உத்தரவிட்டார்.

அதேவேளை தலைமறைவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரிய வருவதாவது,

குறித்த பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் பதவி விலக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதி தவிசாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஜ. இர்பான் சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை (08) ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், பிரதி தவிசாளர் அறைக்குள் உள் நுழைந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து பிரதி தவிசாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு சென்ற பொலிஸார் இது நிர்வாக ரீதியான பிரச்சனை. எனவே, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதிப் பணிப்பாளரிடம் முறையிட்டு இதற்கான தீர்வை பெறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து பிரதி தவிசாளர் தனது சபை கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிற்பகல் 2.00 மணியளவில் பிரதி தவிசாளரின் காரியாலயத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான 30 பேர் கொண்ட அடியாட்களுடன் உள் நுழைந்து மேசையில் இருந்த பொருட்களை உடைத்து எறிந்து பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கையினை மேற்கொண்டு வந்தனர். எனினும், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து தலைமறைவாகிய இருவரை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (09) அன்று இரவு கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு சபாநாயகரிடம் அனுமதியை பெறும் நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!