பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபராகவுள்ள ஒருவர் 30 வருட காலத்திற்கும் அதிகமாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் கடந்த ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் ஆர்ப்பாட்டம் செய்தும் அப்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பாடசாலையில் தொடர்ச்சியாக அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார்.
மாணவர்களுக்கு கொடுக்கும் உணவுக்கான நிதியில் பாரியளவு மோசடிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை தொடர்பாகவும், அதிபரின் ஏனைய சில்மிசங்கள் மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும், ஆசிரியர்கள் முரண்பட்டால் அவர்களை தனக்கு இருக்கும் அதிகார செல்வாக்கு காரணமாக இடம்மாற்றம் வழங்கி பந்தடித்து வந்துள்ளார்.
அதிபரின் ஊழல் மற்றும் துர்நடத்தைகள் தொடர்பாக தற்போதைய ஆளுநருக்கு தெரியப்படுத்திய போது அதிபரை உடனடியாக கல்விப் பணிமனையில் இணைக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டும் இதுவரை அவர் பாடசாலையை விட்டு விலகவில்லை எனத் தெரிய வருகின்றது.
ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் ஆசிரிய சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரை குறித்த அதிபர் ஏதோ ஒரு விதத்தில் உள்வாங்கி அவரைப் பயன்படுத்தி ஆளுநரை சாந்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனாலும் ஆளுநர் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என குறித்த பின்கதவு அதிகாரி ஆளுநரின் உத்தரவை குப்பைக் கூடைக்குள் போட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அதிபரை புனிதராக்கும் நடவடிக்கையில் கல்வி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செயற்பட்டு வருவதுடன் அதிபரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஒரு குழுவை அமைத்துள்ள போதும் அந்தக் குழு, பாடசாலை விடுமுறை விட்ட பின் அதிபருக்கு தாம் பாடசாலைக்கு வரப் போகின்றோம் என தெரியப்பட்டுத்தியுள்ளார்கள்.
இதன் காரணமாக அதிபரின் ஏற்பாட்டில் அதிபருக்கு சார்பான சிலரை பாடசாலைச் சமூகம் எனும் பெயரில் ஆயத்தப்படுத்தி அதிபர் நல்லவர் என விசாரணைக் குழு வந்த போது அதிபரின் துாண்டுதலில் தெரிவித்துள்ளார்களாம்.
குறித்த விசாரணைக் குழு எப்போது வந்தது எனத் தெரியாது அதிபரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை குறித்த பின்கதவு அதிகாரி தனக்கு கீழ் உள்ளவர்களை மனச்சாட்சி இல்லாது பந்தாடி வரும் நிலையில் தனது உறவினரான பெண் முகாமைத்துவ அலுவலர் ஒருவரை வவுனியாவிலிருந்து யாழிற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரின் செல்வாக்கில் 1 1/2 வருடத்தில் சட்ட விரோதமாக இடமாற்றம் வழங்கியுள்ளார்.
ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் குறித்த பின்கதவு அதிகாரி தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர் ஒருவரின் வால்பிடியாக மாறியுள்ள நிலையில் அவரை எதுவும் செய்ய முடியாதுள்ளமை கல்விக்கும் அனுர அரசாங்கத்தின் கொள்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Recent Comments