அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்கா விட்டாலும் காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானிய கடற்படையினர் உயிரிழந்தமைக்கு காரணமாக எமது அரசாங்கம் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
11 மணித்தியாலங்கள் அவர்கள் உதவி கோரியிருக்கின்றனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கவில்லை.
உதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் வெறி பிடித்து அலைகின்றன.
இத்தகைய பின்னணியில் உலக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா சபை என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.
சரியாக குறிவைத்தே ஈரானிய இலக்குகளை தாக்கியதாக குறித்த நாடுகள் கூறுகின்றன. அப்படி என்றால் 167 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களை இலக்கு வைத்தா தாக்கியுள்ளனர்?
வெனிசுவேலா ஜனாதிபதியை கைது செய்துகொண்டு செல்கின்றனர். ஈரானில் அதன் ஆன்மீக தலைவரை கொலை செய்கின்றனர். அதேபோன்று 167 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த போர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதேபோன்று ஈரானும் கூட ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், சவுதி அரேபியா போன்ற நாடுகளை தாக்குவதையும் நிறுத்த வேண்டும்.
இந்த விடயங்களை குறித்த நாடுகள் மேற்கொண்டு சமாதானத்தை நாட தேவையான ஒத்துழைப்பை எமது அரசாங்கம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆனால் அதுதான் இங்கே பாரிய கேள்விக்குறியாகியுள்ளது. எமது அரசாங்கம் கிட்டத்தட்ட 100 ஈரானிய கடற்படையினர் இறந்ததற்கு காரணமாக கொலைக்குரிய காரணகர்த்தாக்களாக இருக்கின்றது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
11 மணித்தியாலம் 12 மணித்தியாலம் உதவி கேட்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையில் உதவி கேட்டதற்கு உதவி வழங்கவில்லை. ஆனால் இங்கே வெளியில் கூறுகின்றார்கள் உதவி வழங்காது விட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


Recent Comments