Saturday, February 7, 2026
Huisதாயகம்வவுனியா வடக்கு தவிசாளர் தொடர்பில் பிரதி அமைச்சர் உபாலி குற்றச்சாட்டு..!

வவுனியா வடக்கு தவிசாளர் தொடர்பில் பிரதி அமைச்சர் உபாலி குற்றச்சாட்டு..!

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு தான் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில் வைத்து பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று (05.02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மணலாறு அபிவிருத்திக் குழு கூட்டம் காலை 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருந்தேன். கூட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்களின் பின்னர் பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா வடக்கின் தவிசாளர்களுக்கிடையில் விவதாம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன் போது மேடையின் முன் வரிசையில் அமர வேண்டும் என தவிசாளர் கோரிக்கை விடுப்பதாக பிரதேச செயலாளர் என்னிடம் வந்து கூறினார்.

இதனையடுத்து மாகாணசபை உள்ளூராட்சி அமைச்சின் விதிமுறைகளின் படி மேடையில் அமர்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அனுமதி உள்ளது. இது தொடர்பாக நான் விளக்கமளித்திருந்தேன்.

இருப்பினும் வலுக்கட்டாயமாக மேலே வந்து அவர் எனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். நான் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கூட்டத்தை ஆரம்பித்திருந்தேன்.

இதன்போது மொழிபெயர்ப்பு தேவையா என்று அங்கிருந்த மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டிருந்தேன். அவர்கள் தேவையில்லை என்பதால் கூட்டம் அப்படியே நடாத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த தவிசாளர் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒலிவாங்கி வேண்டுமா என்று கேட்ட போது அவர் கோபத்துடன் என்னிடம் இருந்து அதனை வாங்கினார். பின்னர் அவர் உரையாற்றினார்.

நெடுங்கேணியில் நடைபெற்ற கிபுல் ஓயாவிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அவர் குறிப்பிட்டார். அதற்கு தலைமை தாங்கியமையாலேயே தன்னை நீங்கள் பழிவாங்குவதாக அவர் கூறினார்.

தனக்கு மேலே இருக்க உரிமை உள்ளது. தான் ஒரு பிரதேச சபையின் தவிசாளர் என்று கூறினார். எனக்கு சிங்களம் தெரியாது. அனைத்திற்கும் மொழி பெயர்ப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவற்றை கூறிக்கொண்டு அவர் வெளியேறியிருந்தார். நீங்கள் கூறியதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற வகையில் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய போதும் அவர் அதனை கேட்காமல் ஆவேசத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்.

முதலில் கூட்டத்திற்கு வருகைதரும் அனைவரும் வருகையை உறுதிப்படுத்துவதற்காக தங்கள் கையொப்பத்தை இடவேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. கடந்த கூட்டத்தில் பதில் கடமையில் இருந்த பிரதேச செயலாளர் ஒருவராலேயே மேலே ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நான் வவுனியாவில் பிறந்தவன். தமிழ் மக்களுடன் வளந்தவன். அரசியலில் சகோதரத்துவத்துடன் வேலை செய்பவன். இது வவுனியா மக்களுக்கு நன்கு தெரியும். குறித்த தவிசாளருடன் தனிப்பட்ட எந்த கோபமும் எனக்கு இல்லை.

அவர் வெளியேறி சென்றவுடன் முகநூலில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதாவது கூட்டத்தில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இனவாத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்தார்.

மேடையில் வைத்து அவரை அவமானப்படுத்தியதாகவும் அதனை விட்டு இறங்குமாறு நான் கூறியதாகவும் அவர் பதிவிட்டார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு கூற்று. நடந்த சம்பவத்தை கூறாமல் இல்லாத ஒன்றை திரிபுபடுத்தியிருந்தார்.

இது தொடர்பாக எனது கட்சியின் ஆலோசனையின் படி ஆளுநரிடம் ஒரு முறைப்பாட்டை செய்திருக்கின்றேன். எனது கோரிக்கை என்னவென்றால் நான் அவரை அவமதித்துள்ளதாகவோ அல்லது மேடையில் இருந்து இறங்க சொன்னேன் என்று கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

அந்த இடத்தில்50 அரச அதிகாரிகள் இருந்தனர். அவர்களுள் தமிழ் அதிகாரிகளும் அடங்கும். பிரதேச செயலாளர் ஒரு தமிழர். கூட்டத்தில் மொத்தமாக 150 பேர் இருந்தனர். எனவே அவர்களிடம் விசாரணை நடாத்தி நான் அவரை அவமதித்தேனா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஆசனங்கள் ஒதுக்கும் விதிமுறைகள் தொடர்பாக அவருக்கு தெரியப்படுத்துமாறு ஆளுநரிடமும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!