யாழ் பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் தொடர்பான அவதூறான கூற்றுக்களை பிரசுரித்தனர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேருக்கு எதிராகவும், முகநூல் தளங்கள், வலையொளி தளங்கள், ரிக்ரொக் தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் 20ம் பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை எடுத்துக் கொண்ட பருத்தித்துறை நீதிவான் எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதிக்கு நிபந்தனை உடனான கட்டளை ஒன்றை பிறப்பிப்பது தொடர்பிலான தீர்மானத்திற்காக வழக்கை திகதியிட்டார்.
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
அதேவேளை யாழ் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த நிகழ்நிலை காப்புச் சட்ட வழக்கினுடைய தீர்ப்பின் பிரதியையும் இந்த வழக்கில் இணைக்குமாறு தெரிவிக்கப்பட்டதாக மனுதாரரின் சட்டத்தரணி தெரிவித்தார்.


Recent Comments