ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, சுலோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதற்கான மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குக் கிடைக்கும் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு மூலமான நிதி ஆதாரத்தைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.
அத்துடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மேற்கூறிய 5 நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்த 5 நாடுகளும் வாங்கும் எண்ணெய்யின் அளவை 180 நாட்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து, அதற்கேற்ப வரிவிதிப்பை மாற்றியமைக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு மசோதா அதிகாரம் அளிக்கின்றது.
தங்களின் மொத்த தேவையில் 15% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த 100% வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது அணு உலைகளுக்காக ரஷ்யாவிடம் வாங்கும் யுரேனியத்திற்கும், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டுச் செயல்பாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேறினால், மற்றொரு நாட்டின் போர் முயற்சிகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளைத் தண்டிக்க, வரிவிதிப்பை ஒரு புவியரசியல் ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவது இதுவே முதல்முறையாக இருக்கும்.


Recent Comments