Saturday, July 18, 2026
Huisதாயகம்PTAல் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் பிணை..!

PTAல் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் பிணை..!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்கின்றி தடுத்து வைத்திருப்பது, அவரை விடுவிப்பதற்கான ஒரு “விதிவிலக்கான சூழ்நிலை” (exceptional circumstance) என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் (என்றழைக்கப்படும் தனுஷ்) என்பவருக்கே பிணை வழங்க மறுத்து கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ரத்து செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது 26 வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், அவர் தனது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதியினை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தே சிறையில் கழித்துள்ளார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த நபர் மீது, 2012 செப்டம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப் பத்திரிகையில் மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் (PTA கீழ் 115, அவசரகாலச் சட்டத்தின் கீழ் 115) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 106 அரசுத் தரப்பு சாட்சிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகள் வருமாறு:

1. ரூ. 200,000 ரொக்கப் பிணை. தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான நான்கு ஆள் பிணைகள்.

2. காவல்துறை தலைமையகத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும்.

3. பிரதிவாதியின் கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த பிணை நிபந்தனைகள் எதனையாவது மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 15B பிரிவை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இதன் மூலம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் நீதிமன்றங்களுக்கு பிணை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்த போது இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அவதானித்துள்ளது.

மேலும், இந்த நபர் கைது செய்யப்பட்ட போது அவரது மகளுக்கு ஒரு வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், இத்தனை ஆண்டு கால நீண்ட தடுப்புக்காவல் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரது பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்து தவித்துள்ளனர் என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான அஸ்திக தேவேந்திர மற்றும் அருண மதுசங்க ஆகியோர் முன்னிலையாகினர். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!