Friday, July 24, 2026
Huisதாயகம்அரசியல் கைதிகள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த அரசு பொறுப்பேற்றது?

அரசியல் கைதிகள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த அரசு பொறுப்பேற்றது?

அரசியல் கைதிகள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த அரசு பொறுப்பேற்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஸன நாணயக்கார அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இன்று (24.07.2026) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கெளரவ ஹர்ஸன நாணயக்கார அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு விரும்புகிறேன்.

கெளரவ அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பலவற்றுக்கு பதில் சொல்லவேண்டிய, பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு அமைச்சர் அவர்களுக்கும் இந்த அரசாங்கத்திற்கும் உள்ளது என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை.

நீர்கொழும்பு சிறைக்கூடத்தில் நடந்த அநியாயமான கொலைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டியது மட்டுமல்ல அவ்விடயம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு கெளரவ அமைச்சருக்கு உள்ளது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவ்வாறான ஒரு சிறைக்கலவரம் வருவதற்கு ஏற்ற பல காரணங்கள் அங்குள்ளது, அங்கு மாத்திரமல்ல இன்னும் பல சிறைச்சாலைகளில் உள்ளது. ஆனால் எமக்கு இருக்கும் கேள்வி

இந்நிலை ஏற்படுவதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர் தற்போதை கெளரவ அமைச்சர் அவர்கள் மட்டுமா? அல்லது இதுவரை காலமும் இருந்த அனைவருமா?

சிறைச்சாலைகளில் காணப்படும் பிரச்சனைகள் கடந்த காலங்களில் காணப்படவில்லையா? கடந்த காலங்களில் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டபோது எந்த அமைச்சர், எந்த அரசாங்கம் பொறுப்புக்கூறியது?

இவ்வாறான படுகொலைகள் ஒருதடவையா நடந்தது? மீண்டும் மீண்டும் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?

அங்கு காணப்படும் பிரச்சனைகளுக்கு பொறுப்பு சொல்வதற்காக கடந்த காலத்திலும் அமைச்சர்கள் பலர் பதவி விலகியிருக்க வேண்டுமில்லையா? ஏன் அவ்வாறு செய்யவில்லை??

அவ்வாறான பிழைகளை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து சுயமாக விலகும் கலாச்சாரம் எமது நாட்டில் அன்றும் இல்லை இன்றும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் அமைச்சர் ஹர்ஸன அவர்கள் சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரத்தில் சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட முன்னரே அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார், அதற்காக அவரை பாராட்டுகின்றோம்.

ஆனால், கெளரவ அமைச்சர் அவர்கள் பதவியில் இருந்து விலக அல்லது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரக்கூடிய சில காரணங்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

தேசிய மக்கள் சக்திக்கு நாடுமுழுவதிலும் விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவான மக்கள் வாக்களித்தது ஒரு மாற்றத்தை வேண்டி என்று நேற்று இங்கு உரையாற்றிய கெளரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் தெரிவித்தார். அவர் குறிப்பிட்டது உண்மை. ஆனால் அதை புரிந்தவர்களாக அந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஏதாவது முயற்சி எடுக்கிறீர்களா என அதே மக்கள் சந்தேகம் கொள்ளுமளவிற்கு நடந்து கொள்கிறீர்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மிக முக்கியமான சில விடயங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பில் உள்ள கெளரவ அமைச்சர் அவர்கள் அவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமையையிட்டு மனம்வருந்துகிறோம்.

புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டு வருவோம் என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி. அதற்காக அமைச்சர் அவர்கள் எடுத்த முயற்சி என்ன?

அடுத்தது அரசியல் கைதிகள் விடுதலை,

கெளரவ உறுப்பினர் அஜித் பி பெரேரா அவர்களின் அரசியல் கைதிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திலும் ஏனைய ஒழுங்கு விதிகளிலும் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கெளரவ அமைச்சர் அவர்கள் பதிலளித்தார். அப்படியாயின் உங்களுடைய தேர்தல் அறிக்கையில் அரசியல் கைதிகள் என்று யாரை குறிப்பிட்டீர்கள்?

செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்வுகள் நடைபெறுகிறது. கடந்த மாதம் கெளரவ சாணக்கியன் அவர்கள் 27/2 இனூடாக அமைச்சர் அவர்களிடம் கேள்வியொன்றை கேட்டிருந்தார். அதன் போது அகழ்வுப்பணிகள் நடைபெறும் அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஆராய்ந்து படுகொலைகள் நடைபெற்ற காலம் மற்றும் டி என் எ பரிசோதனைகள் ஊடாக அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்பாக பேசியிருந்தார்.

ஆனால் ஏற்கனவே சந்திரிக்கா அம்மையாருடைய காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்ட 12 மனித எச்சங்களை ஆராய்வதனூடாக படுகொலைகள் நடைபெற்ற காலத்தையும் படுகொலை செய்யப்பட்டவர்களை அடையாளம் காணும் செயற்பாட்டையும் செய்யலாம்.

ஆனால் கெளரவ அமைச்சர் அவர்களால் அவ்வாறான செயற்பாட்டுக்கான நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும். எனவே எதிர்வரும் காலத்திலாவது அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

எனவே இறுதியாக ஒரு விடயத்தை இந்த உயரிய சபைக்கு கூற விரும்புகிறேன். அதாவது எமது நாட்டில் அரச சேவையில் காணப்படும் முறைமைக் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்காமல் தனிநபர்களை குற்றம் சுமத்துவதனாலோ அல்லது மாற்றுவதனாலோ இப்பிரச்சனைகளிற்கு தீர்வு காண முடியாது.

எனவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அச்சந்தர்ப்பம் கிடைக்காத அனைவரும் ஒன்றுசேர்ந்து அரச சிறைச்சாலை முறைமை மாற்றத்திற்கு உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!