கிழக்கு பல்கலைக் கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த சம்பவத்தை இன்று புதன்கிழமை (19) பிற்பகல் நேரில் கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில், விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் சுமார்.12.00மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்த மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
அதன்போது, தவறான முடிவெடுத்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments