கடந்த அரசாங்கக் காலத்தில் பெரும் பேசுபொருளாக மாறிய இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஊழல் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த முக்கிய தகவலை வெளிப்படுத்தினர்.
முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் ஆவணக் கோப்புகள் அனைத்தும் தற்போது ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் நேரடிப் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்குரிய கால அவகாசத்தை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோரினர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் விரிவாக ஆராய்ந்த பிரதான நீதவான், வழக்கின் அடுத்தகட்ட முன்னேற்றத்தை உடனடியாக அறிவிக்குமாறு ஆணைக்குழுவிற்குப் பணிப்புரை விடுத்து, வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் இஸ்ரேலுக்கு விவசாயப் பணிகளுக்காக தொழிலாளர்களை அனுப்பும் திட்டத்தில், தகுதியானவர்களைப் புறந்தள்ளிவிட்டு தனக்கு அரசியல் ரீதியாக ஆதரவளித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கியதன் மூலம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக மனுஷ நாணயக்கார மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவளை மாவட்ட ரீதியாக விசா ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட போதும் வடக்கிலிருந்து இதுவரை காலமும் எத்தனை நபர்கள் சென்றுள்ளனர்? குறித்த இலவச தொழில் விசா தொடர்பில் நீதியான விசாரணை நடைபெறுமா அல்லது செம்மணி போல் புதைக்கப்படுமா?


Recent Comments