வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்தின் கீழுள்ள, மாறயிலுப்பை கமக்கார அமைப்பு பிரிவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புதுக்குளத்தையும், அதன்கீழான தமது பூர்வீக விவசாயக் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, காணிகளுக்குரிய விவசாயிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கதறி அழுது கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், விவசாயிகளின் கோரிக்கையினைக் கேட்டறிந்ததுடன் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் விவசாயக் காணிகளையும் பார்வையிட்டார்.

குறிப்பாக மாறாயிலுப்பை கமக்கார அமைப்பு பிரிவில் புதுக்குளத்தின் கீழுள்ள விவசாய நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலங்களுக்கு முன்பிருந்தே நெற்செய்கை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இத்தகையசூழலில் கடந்தகால யுத்த நிலமைகள் காரணமாக அப்பகுயில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சிறுபற்றைக் காடுகளாகவுள்ள தமது நெற் செய்கைக் காணிகளை விவசாயிகள் துப்பரவுசெய்யும் போது அதற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ள வனவளத் திணைக்களம், மக்களின் காணிகளுக்கு எல்லைக் கற்களையிட்டு ஆக்கிரமிப்புச் செய்துள்ளது.

அந்த வகையில் நிலமைகளை நேரில் பார்வையிட்டதுடன், விவசாயிகளின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வயல் காணிகளையும், புதுக்குளத்தையும் விடுவிப்பது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.


Recent Comments