Saturday, September 19, 2026
Huisஉலகம்அமெரிக்க விசா மறுப்பு; ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் உரையாற்ற பாலஸ்தீன அதிபருக்கு அனுமதி..!

அமெரிக்க விசா மறுப்பு; ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் உரையாற்ற பாலஸ்தீன அதிபருக்கு அனுமதி..!

அமெரிக்கா தனக்கு மீண்டும் நியூயார்க் செல்வதற்கான நுழைவு விசாவை (Visa) மறுத்ததை அடுத்து, உலகத் தலைவர்களின் வருடாந்திரக் கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் காணொளி மூலம் உரையாற்றுவதற்கு வியாழக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை வாக்களித்தது. அவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் பதிவாகின; 4 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டன. மேலும், அமெரிக்காவிற்குப் பயணம் செய்யத் தடைபடும் பட்சத்தில், வரும் ஆண்டில் ஐ.நா. கூட்டங்கள் அல்லது மாநாடுகளில் மஹ்மூத் அப்பாஸும் மற்றும் ஏனைய உயர் மட்ட பாலஸ்தீன அதிகாரிகளும் காணொளி வாயிலாகப் பங்கேற்கவும் இத்தீர்மானம் வழிவகுக்கிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) மற்றும் மேற்குக்கரையைத் தளமாகக் கொண்ட பாலஸ்தீன நிர்வாகம் (PA) ஆகியவற்றின் உறுப்பினர்களின் நுழைவு விசாக்களை ரத்து செய்வது மற்றும் மறுப்பது என்ற தனது முடிவினால் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட சுமார் 80 பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நுழைவுவிசா தடையை நீட்டித்துள்ளதாக வாஷிங்டன் புதன்கிழமை அறிவித்தது.

“பாலஸ்தீன நிர்வாகம் ஒரு பங்காளியாக நடத்தப்பட வேண்டுமென்றால், அது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் தீவிரமான ஆட்சிமுறைக்கு மாற்றாக இராஜதந்திர நாடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணைத் தூதர் டேமி ப்ரூஸ் (Tammy Bruce) வாக்கெடுப்புக்கு முன்பு பொதுச் சபையில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைப் பாலஸ்தீனத் தலைவர்கள் நிராகரித்து வன்மையாகக் கண்டித்துள்ளதாக ஐ.நாவுக்கான பாலஸ்தீனத் தூதுவர் ரியாத் மன்சூர் பொதுச் சபையில் தெரிவித்தார்.

குறிப்பிட்ட அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், சர்வதேச நீதிமன்றங்களில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்குகளைத் தொடர்வது உட்பட “இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை சர்வதேசமயமாக்கும்” நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகப் பாலஸ்தீன அதிகாரிகள் மீதான நுழைவுவிசா தடைகளை நீடிக்கப் போவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை புதன்கிழமையன்று தெரிவித்தது.

அப்பாசின் நுழைவுவிசா மறுக்கப்பட்டதை அடையாளம் வெளியிட விரும்பாத பாலஸ்தீன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

1947 ஆம் ஆண்டின் ஐ.நா. “தலைமையக ஒப்பந்தத்தின்” கீழ், நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் வருவதை அமெரிக்கா பொதுவாக அனுமதிக்க வேண்டும். இருப்பினும், பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும் வெளியுறவுக் கொள்கைக் காரணங்களுக்காகத் தனக்கு நுழைவு விசாக்களை மறுக்க உரிமை உள்ளதாக வாஷிங்டன் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!