அனுர அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் அரச திணைக்களங்கள் தூய்மையாக இருத்தல் காணப்படுகின்ற போதும் அதன் உள்ளார்ந்த விடயத்தை கருத்தில் கொள்ளாது ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என அலுவலகங்களில் குப்பைகளை கூட்டி சிரமதானம் செய்யும் படங்களை சமூக வலைதளங்களில் காணக் கூடியதாகவுள்ளது.
அண்மையில் வவுனியாவில் சுமார் 500க்கும் அதிகமாக பணிபுரியும் அரச திணைக்களம் ஒன்றில் கடமை நேரத்தில் சிரமதானத்தை முன்னெடுத்திருந்தனர். ஏலவே அங்கு ஒப்பந்த சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் உள்ள நிலையில் சிரமதானம் என்ற போர்வையில் நேரத்தை விரயம் செய்திருந்தனர். வெளிப்பார்வைக்கு இது சாதாரணமாகத் தோன்றினாலும் குறைந்த பட்சம் சுமார் 1000 மனித மணித்தியாலங்கள் வீண்விரயம் செய்யப்பட்டிருந்தது.
அதாவது சராசரியாக குறைந்த பட்சம் 50,000 ரூபாய்கள் ஒருவருக்கு ஊதியமாக மாதாந்தம் வழங்கப்படுமாயின் குறித்த தினத்தில் எவ்வளவு பணம் விரயம் செய்யப்பட்டது என்பதும் அதற்கு பதிலாக விடுமுறை தினம் ஒன்றில் பதில் கடமை செய்யும் பட்சத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவாக மேலதிகமாக எவ்வளவு செலவாகும் என்பதும், குறித்த சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் வழங்கப்பட்ட ஊதியம் போன்றவற்றைக் கணிப்பிட்டால் எவ்வளவு பணம் குறித்த திணைக்களத்தின் ‘மும்மூர்த்திகளின் மேலதிக’ தூரநோக்கற்ற செயலால் வீண் விரயமாகியுள்ளது எனப் புரியும். இதுவும் மக்களின் வரிப்பணமே.
இவ்வாறான பொருத்தமற்ற செயல்களே வடகிழக்கின் ஏனைய அரச திணைக்களங்களிலும் இடம் பெறுகின்றன.
மாறாக ஜனாதிபதி அனுரவின் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் மக்களுக்கான வினைத்திறனான சேவை, துரித சேவை, பக்க சார்பற்ற சேவைகளை வழங்குவதையே மக்கள் விரும்புகின்றனர். கடமை நேரத்தில் சிரமதானம் செய்வதால் சேவை பெற வரும் மக்களும், சேவையை வழங்கும் கீழ்நிலை ஊழியர்களும் நேரடியாகவே பாதிப்படைகின்றனர்.
எனவே இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அரசினதும், அவர்களின் உயர் மட்ட அதிகாரிகளதும் கடமையாகும்.
Recent Comments