Saturday, January 24, 2026
Huisதாயகம்விகாரையின் கீழ் இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள்; மடியில் கனமில்லை எனில் நிரூபியுங்கள்..!

விகாரையின் கீழ் இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள்; மடியில் கனமில்லை எனில் நிரூபியுங்கள்..!

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (01) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீன முறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வர வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட போது தமது உறவுகளை, குறிப்பாக கணவரை மனைவியும், மகன், மகளை பெற்றோரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய முன்றலில் ஒப்படைத்தார்கள். தடுப்பு முகாம்கள், கடல் எனப் பல இடங்களிலும் சரணடைந்தார்கள்.

வட்டுவாகலில் ஒப்படைக்கப்பட்டவர்களை கொக்குத்தொடுவாய் நோக்கியும், கேப்பாப்புலவு நோக்கியும், வட்டுவாகல் கடற்கரை நோக்கிய பாதையிலும் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டார்கள்.

இலங்கைப் படையினரிடம்தான் ஒப்படைத்தோம். இன்னும் காணவில்லையே அவர்கள் எங்கே என்று தேடுகின்றார்கள். நீதிஅமைச்சரே நீதி தாருங்கள். நியாயப்படி நடந்து கொள்ளுங்கள்.

வட்டுவாகல் கடற்கரைப் பாதை நோக்கி பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றவர்களை விட்டு விட்டு பேருந்துகள் மட்டும் திரும்பி வந்ததாகவும் மக்கள் சொல்கின்றார்கள். வட்டுவாகல் தனித்தமிழ் சைவக் கிராமமாகும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் ஒரு பெரிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்களை கொண்டு சென்று, படுகொலை செய்து புதைத்துவிட்டு அதன்மேல் இவ்வாறு பெரியவிகாரை இங்கு அமைத்து விட்டதாக மக்கள் கூறுகின்றனர். உங்களின் மடியில் கனமில்லை என்றால் இதனை நிரூபியுங்கள்.

விகாரையை அகற்றி ஆழமாகத் தோண்டுங்கள். அல்லது புதிய தொழில்நுட்ப முறையில் ஆழத்தில் இருப்பவற்றை அறியக் கூடியதான நவீன கருவிகளைப் பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கும் நீதியைத் தாருங்கள். சிலவேளை நீங்கள் நீதியைத் தரும் போது, நீதிபதி சரவணராஜா போல்தான் உங்களுக்கும் நீதி கிடைக்குமோ தெரியாது.

ஆனால் இன்றைய அரசை நம்புவோம் இந்த விடயங்களுக்கு நீதி தாருங்கள் என்று கேட்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!