Sunday, June 7, 2026
Huisதாயகம்ஈஸ்டர் விசாரணை இறுதிக் கட்டத்தில்; பீதியில் தடுமாறும் ராஜபக்ஸ குடும்பம் - ஜெகதீஸ்வரன் எம்.பி

ஈஸ்டர் விசாரணை இறுதிக் கட்டத்தில்; பீதியில் தடுமாறும் ராஜபக்ஸ குடும்பம் – ஜெகதீஸ்வரன் எம்.பி

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் ராஜபக்ஸ குடும்பம் என்ன செய்வது என்று பீதியடைந்த நிலையில் தடுமாறுகின்றனர். எதிர்கட்சியினரும் அவர்களுக்கு உடந்தையாக மௌனிகளாக இருக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலன் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். மேலும் அவர்கள் குறுக்கு வழியிலாவது தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இதற்கும் மேலாக, ரஞ்சித் மத்தும பண்டார, ஞானசார தேரர் உட்பட பலரும் இணைந்து ஒன்றிணைந்து எதிர்க்கட்சியினர் என இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும், மக்களிடையே ஒரு சினிமா பாணியிலான நடிப்பைக் காட்டுவதற்காகவே இத்தகைய செயல்பாடுகளைச் செய்கிறார்கள்.

குறிப்பாக தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் தற்காக மேற்கெள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் மூலமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. அத்தோடு இதன் விசாரணையானது நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டது. இந்த அநீதிக்கு நிச்சயமாக எங்களது அரசாங்கம் மற்றும் சட்ட ரீதியாகத் தீர்ப்பு வழங்க இருக்கின்றோம்.

அதேவேளையில், பீதியடைந்த இக்குழுவினர் குறித்த விசாரணையைக் குழப்பும் வகையில் பல்வேறுபட்ட முயற்சிகளைச் செய்து வருகின்றார்கள். நிச்சயமாக அவர்களது முயற்சிகள் பலனளிக்கப் போவதில்லை.

எதிர்க்கட்சியினருக்கு எழுப்பப்படும் கேள்விகள் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் மக்களுக்காக அரசாங்கத்தை அமைக்க முற்படுகிறீர்களா? அல்லது உங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்காக, உங்களுடைய கூட்டாளிகளையும், கடந்த காலங்களில் மக்களுக்கு எதிராக அநீதி இழைத்தவர்களையும் காப்பாற்றுவதற்காகக் கூடுகிறீர்களா? நிச்சயமாக மக்கள் அனைத்தையும் அறிவார்கள்.

உங்களுடைய போலி நாடகங்கள் எடுபடப் போவதில்லை. விரைவாக இந்த விசாரணைக்குரிய தீர்ப்புகள் வெளிவரும் போது, வெட்டவெளிச்சமாக அனைத்துக் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்குரிய தண்டனையை எங்களது அரசாங்கம் வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இப்படிச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சியினர் விசாரணையைக் குழப்புகின்ற நடவடிக்கையை ஏற்படுத்துகின்ற போதும், வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். நான் அவர்களிடம் கேட்க விரும்புவது.

இவர்களும் அந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்கின்றார்களா? அல்லது இவர்களும் அந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக, ஆதரவாக இருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.

எத்தனையோ சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்கின்ற இவர்கள், பாரிய அளவில் ஒரு அநீதி நடந்திருக்கின்ற போது குறிப்பாக வட- கிழக்கு பகுதியில் கூடுதலாகக் கிறிஸ்தவ மக்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுடைய மனங்களில் ஆறாத வடுவாக இருப்பது இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் தான் ஏன் உங்களுடைய ஆர்ப்பாட்டங்கள் இல்லை? ஏன் இந்த அநீதிக்கு எதிராக உங்களால் குரல் கொடுக்க முடியவில்லை? வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றீர்கள். இதன் மூலமாக அநீதி இழைக்கப்பட்ட இந்த மக்களுக்கு நீங்கள் என்ன விடயத்தை வெளிப்படுத்துகிறீர்கள்?

நவீன் திஸாநாயக்கவின் கருத்து மற்றும் வடிவேலு பாணி நகைச்சுவை இதற்கும் மேலாக, வடிவேலு பாணியில் கூறுவதாக இருந்தால், ஸ்பெஷல் ஐட்டம் ஒன்றாக நவீன் திஸாநாயக்க ஒரு கனவு கண்டிருக்கின்றார்.

இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு அல்லது இந்த நாட்டைச் சொர்க்க புரியாக மாற்றுவதற்காக, ரணில் விக்ரம சிங்கவின் மூளையும் சஜித் பிரேமதாசவின் உடலும் இணைய வேண்டும் என்று கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில் இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. சஜித் பிரேமதாசவுக்கு மூளை இல்லை என்ற வகையில், அவரால் தனித்துச் செயல்பட முடியாது.

அதேபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆரோக்கியமான உடல் இல்லை என்ற வகையில் அதாவது அந்த வடிவேலு பாணியில் மீண்டும் சொல்வதானால் ‘பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’ என்ற வகையில் இருக்கின்றது. இவர்களுடைய இந்தக் கற்பனைகளும் யதார்த்தத்திற்குப் பொருத்தமில்லாத விடயங்களும் நிச்சயமாக ஒரு வேடிக்கையான வினோதமான ஒன்றாக இருக்கின்றது.

இவர்கள் எந்தத் தந்திரோபாய ரீதியில் இந்த மக்களை அணுகலாம் அல்லது மக்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்களே தவிர, இவர்களிடம் முறையான திட்டம் இல்லை. இவர்களுக்கு யோசனைகளும் இல்லை. சிந்தனைச் சக்தியும் இல்லை. இவ்வாறான வேடிக்கையான அறிக்கைகளை விட்டுச் சமூகத்திலே மிகவும் கேலிக்குள்ளானவர்களாக இருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் பொருளாதார நிலை எங்களைப் பொறுத்த வரையில், எங்களது அரசாங்கம் மக்களின் வரப்பிரசாதத்தைப் பெற்ற அரசாங்கம் என்ற ரீதியில், மக்கள் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட அநீதி, அத்துமீறல்களுக்கு நிச்சயமாகப் படிப்படியாகத் தண்டனைகள் வழங்கப்படும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்குரிய விசாரணைகள் படிப்படியாக இடம்பெறும்.

இப்போது சிறைச்சாலை சென்றிருப்பவர்கள். தங்களுடைய அனுபவங்களைப் பெற்றுத் தாங்களாகவே திருந்துவதற்குரிய வழிவகைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். நாங்கள் சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை.

‘பணங்காட்டு நரி’ என்ற பாணியில், நாங்கள் எதற்கும் அஞ்சாத வகையில் எங்களது நியாயமான அரசாங்கத்தை, மக்கள் விரும்புகின்ற அரசாங்கத்தை, நீதியான முறையில் கொண்டு செலுத்துவோம்.

இப்பிரச்சினைகளால் வேதனை அடைந்து, துன்புற்று இருக்கின்ற இந்த மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை ஆசுவாசப்படுத்துகின்ற அரசாங்கமாகவும் தொடர்ச்சியாக எங்களது அரசியல் பயணத்தை மேற்கொள்வோம்.

எனவே, இவர்களது வேடிக்கை விளையாட்டுகளுக்கு இங்கே இடமில்லை. இவை அவ்வப்போது வந்து செல்லும் மழைத்தூறல் போன்றது தான். மக்கள் மத்தியில் இவை எடுபடப் போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

ஈஸ்டர் புனித தினத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்குரிய தண்டனைகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொடுக்கத் தான் போகிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே, எஞ்சியிருப்பவர்களும் தங்களைத் தாங்கள் திருத்திக் கொண்டு மக்கள் பணியைச் சரியான முறையில் செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!