வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் இன்று (21) கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம்.
கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப் பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.


Recent Comments