5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆண்டு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலை விடுமுறை நாட்களில் மேலதிக கற்றல் செயற்பாட்டுக்காக கற்பித்த ஆசிரியர் ஒருவர் யாழ் வடமராட்சியில் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி வடஇந்து ஆரம்ப பாடசாலையில் கற்பிக்கும் தில்லைவாசன் என்ற ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார், மேலதிக வகுப்பிற்காக வந்த மாணவர்களுக்கு குறித்த ஆசிரியர் விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
இதன் போது பாதிக்கப்பட்ட மாணவியின் விடைத்தாளை திருத்திய மாணவி பிழையான விடைகள் எழுதப்பட்ட போதும் அதை திருத்தி சரியானதாக குறிப்பிட்டு அதிக புள்ளியை போட்டுள்ளார்.
இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த பின் அந்த மாணவியை அடிக்காது விடையை எழுதிய மாணவியை அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முன்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்திய சாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்று கூடியிருந்தனர்.
பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.
இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தங்களது பணிக்கடமைகளை விட மேலதிகமாக கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக பாடுபட்ட ஆசிரியர் குறித்த மாணவியை கடுமையாகத் தாக்கினாரா? அல்லது மெதுவாகத் தாக்கினாரா என்பது தொடர்பாகவும் குறித்த மாணவிக்கு காயங்கள் எப்படி உள்ளன என்பது தொடர்பாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகளின் படியே ஆசிரியருக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் அமையும் எனத் தெரிய வருகின்றது.
ஏற்கனவே குறித்த பாடசாலையில் பெற்றோர் ஒருவருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து ஊடகங்களில் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் வெளியாகியிருந்தன.
கல்வி நிர்வாக பரீட்சை எழுதாது பதவிக்கு வந்த முன்னாள் பணிப்பாளர் யோன்குயின்ரஸ் அவர்களால் கடந்த காலத்தில் கல்வித் துறையில் விசுவாசமாக கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக சில தோல்வியடைந்த அரசியல்வாதிகளுடன் இணைந்து தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் அறுவடைகளையே வடக்கின் கல்வி தற்போது பெற்று வருகின்றது.
Recent Comments