யாழில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் ஒருவர் கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் யாழ் – புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவனை தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் தண்டித்துள்ளார்.
அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீடு சென்ற மாணவன் மன உளைச்சல் அல்லது ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் மருந்து அருந்தியதாக கருத முடிகின்றது.
சட்ட ரீதியாக மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தவறு எனக் காணப்படுகின்ற சூழலில் ஆளுமை மிக்க சமூகத்தை உருவாக்கும் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகி பரீட்சை மைய பாடப் புத்தகத்தை மட்டும் கற்பிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு வரும் சூழலில் வடக்கின் கல்வியும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
Recent Comments