பாராளுமன்றத்தில் 2025.09.24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள (19ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இத்திக தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இச்சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டனை முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலும், அவ்வாறான குற்றச் செயல்களுக்கு சட்டரீதியாகத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
சிறுவர் தடுப்பு நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற உடல் ரீதியான தண்டனைகளை நிறுத்துவதற்கு இலங்கையில் நீண்டகாலமாக சட்ட ஏற்பாடுகள் காணப்படவில்லை.
இது தொடர்பில் சமூகத்தில் விரிவாகப் பேசப்பட்டு வந்ததுடன், அவ்வாறான நிலைமையை மாற்றுவதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இது பற்றிய சட்டமொன்றுக்கான தேவை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்களிடமிருந்தும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த சட்டமூலத்தைக் கொண்டு வந்திருப்பதாக சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி அமைச்சு, ஆசிரியர் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்கு அமைய இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஆசிரியர்களை இலக்கு வைத்துக் கொண்டுவரப்படும் சட்டமூலம் அல்ல என்றும், சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டனைக்கு உட்படுத்தும் அனைவருக்கும் உரிய சட்டம் இது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


Recent Comments