இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தக்கு இந்தத் துறையில் தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளது என்றும், அமைச்சு அதை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் விளக்கினார்.
தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணி நேரமாக நீட்டிக்க முன்மொழிந்தது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது.
இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின் படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கியக் கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.
தொழிற் சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.
எனவே, பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும், என்றும் அவர் உறுதியளித்தார்.
தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.
இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.


Recent Comments