வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த மூவர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.
இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம் வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உறுப்பினர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் மூவரும் சரணடைந்தனர்.


Recent Comments