மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத் தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் எனவும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறு அரச அதிபர் க.கனகேஸ்வரன் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக எரிபொருட்களுக்கான நெருக்கடி நிலைமை காணப்பட்டது.
இந்த நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு தேவையான எரி பொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மன்னார் மாவட்டத்திற்கு தேவையான டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தற்போது போதிய அளவு கையிருப்பில் உள்ளன.
தற்போது நெல் அறுவடை காலம் என்பதால், அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகள் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்றும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் தாராளமாக வழங்கப்படுவதால், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணங்களை மேற்கொள்ள முடியும்.
கடற்றொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. மீனவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களில் எரி பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் சிரமங்கள் அல்லது புகார்கள் இருந்தால், மாவட்டச் செயலகம் மற்றும் விவசாயிகள் கமலநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்திலும், மீனவர்கள் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திலும் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Recent Comments