டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட நிவாரணங்களில் 60 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி இடம் பெற்றுள்ளதாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களின் உத்தரவுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விசாரணைகளின் போது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைளில் மோசடி இடம்பெற்றமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நால்வர் உடனடியாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், 8 இற்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களிடமும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், குறித்த மோசடியில் ஈடுபட்ட சில அலுவலர்கள் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டு மோசடி செய்த பணத்தை மீள செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழே இவ்வாறான மோசடிகள் அனர்த்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் வெளிப்படையான நீதியான விசாரணைகள் இடம்பெற்று மோசடி செய்த உத்தியோகத்தர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வன்னியின் அபிவிருத்தி நாயகனாக வலம் வந்த திலீபன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காணி, மணல், கிரவல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக செயற்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய விசாரணைகள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.


Recent Comments