ஈழத் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி, வடகிழக்கு மாகாணங்கள் எங்கும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான எழுச்சியை வலியுறுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் நடைபெற்றது.
சமூக செயற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
இத்தீர்மானத்தின் 50வது ஆண்டு பூர்த்தியை எழுச்சியுடன் கொண்டாடுவதற்கும், அதன் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக, வவுனியா மாவட்டத்திற்கான ஏற்பாட்டுக் குழு இன்றைய தினம் முறைப்படி தெரிவு செய்யப்பட்டது. இக் குழுவின் ஒருங்கிணைப்பில், வவுனியா மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை ஒழுங்கு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் மாவட்ட ரீதியான நிர்வாகத் தெரிவுகள் பூர்த்தியடைந்த பின்னர், பொதுக் கலந்துரையாடல் ஒன்றின் மூலம் வடகிழக்கிற்கான ஆரம்ப நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



Recent Comments