கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமர உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபரைக் குற்றஞ்சாட்டப் போதுமான சான்றுகள் இருந்த போதிலும் அவரை விடுவிக்கப் பரிந்துரைப்பது தவறான செயல் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, தடுத்து வைத்து, கப்பம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கில், முன்னர் இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அதே வழக்கில் அவரை மீண்டும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக விரிவான வாதங்களை முன்வைத்த சட்டவாளர் அச்சல செனவிரத்னவின் கோரிக்கையை ஏற்று நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


Recent Comments