முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டமை தொடர்பில், அன்றைய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அதன் தலைவர் பாஷ்வர குணரத்ன, முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசந்த அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இவர்கள் சந்தேக நபர்களாக பெயரிடப்படுவதாக இன்று (29) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசேட மனு ஒன்றின் ஊடாக கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் அறிவித்ததைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்
சந்தேக நபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடையை விதிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான், பயணத்தடை உத்தரவைப் பிறப்பித்ததுடன், அது குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கை எனக் கூறி, அரச நிதியில் 12,000 டி-சேர்ட்டுகள் (T-shirts) அச்சிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த டி-சேர்ட்டுகளின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் அச்சிடப்பட்டு, மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரங்களின் போது அவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Recent Comments