மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” என கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்தும் இதன்போது பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் 07.08.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே இந்த மிகை ஊழியர் அதிபர்களுக்கு நியாயமான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
மிகைஊழியர் அதிபர் விடயத்தில் ஓர் அரசாக தங்களின் நிலைப்பாடு பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதாகத்தான் அமையவேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

அவர்கள் இப்பொழுதும் இடர்படுகின்ற இரண்டு பிரச்சினைகளுள் ஒன்று அவர்களுக்குரிய நிருவாகக் கொடுப்பனவு கிடைக்கப் பெறாமை தொடர்பானது.
அவர்களும் ஏனைய அதிபர்களைப் போல நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் என பெரும் ஆளணிக்கு தலைமை வகிக்கின்றார்கள். இருந்தபோதும், ஏனைய அதிபர்கள் பெறும் நிருவாகக் கொடுப்பனவு அவர்களுக்கு இதுவரை வழங்கப்படாதுள்ளது.
இப்பொழுது சில ஆண்டுகளாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் கோரப்படும் அதிபர் விண்ணப்பங்களில் மிகை ஊழியர் தவிர்ந்த அதிபர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
விண்ணப்பிப்பதிலும் புறக்கணிப்பு, கல்விச் சூழமைவில் இது ஒரு நவீன தீண்டமையாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமா என பிரதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
எனவே தயவுசெய்து பிரதிஅமைச்சர் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
தயவுசெய்து இந்த விடயத்தில் புறக்கணிப்புக்களைச் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ள விடும்புகின்றேன்.
வடக்கு மாகாணத்தில் ஒரு தொகுதி அதிபர்கள் ஒருவிதமாகவும், ஏனைய அதிபர்கள் வேறுவிதமாகவும் நடாத்தப்படுகின்றனர். இவ்வாறான புறக்கணிப்புக்களைச் செய்ய வேண்டாம் என்றுதான் நான் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்


Recent Comments