Monday, August 10, 2026
Huisதாயகம்துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்..!

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்..!

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில், துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்து புறப்படும் நேரங்கள்:

* காலை 6.00 மணி – துணுக்காய்
* காலை 6.10 மணி – மல்லாவி
* காலை 7.00 மணி – மாங்குளம்
* காலை 7.10 மணி – மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்

மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, துணுக்காய் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!