நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகளது பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் நீதிமன்ற சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அண்மையில் சங்கத்தின் சகல உறுப்பினர்களும் கொழும்பில் கூடி இவ்விடயம் தொடர்பில் ஐந்து யோசனைகளை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் பிரதிநிதிகள் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு அமைய எடுத்த தீர்மானம் குறித்து தன்னால் உறுதியான தீர்மானத்தை வழங்க முடியாது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவற்கு சட்டத்தரணிகள் சங்கத்தினர் அனுமதி கோரிய நிலையி;ல் இன்றைய தினம், நீதியமைச்சர், நீதியமைச்சின் செயலாளர் உட்பட அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் பங்குப்பற்றலுடன் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


Recent Comments