வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா இன்று (11) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வட மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
இங்கு உரையாற்றிய ஆளுநர்,
முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர் கல்விக்கான வாய்ப்பு இருந்ததாகவும் இன்று (11) அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது அரச பல்கலைக் கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர் கல்வி வாய்ப்பு பரந்தளவில் கிடைப்பதாகவும் தெரிவித்த ஆளுநர் அதனைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர் கல்வித் தெரிவு இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிய ஆளுநர், பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
வட மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Recent Comments