கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் – ஜோசப் ஸ்ராலின் அறிவிப்பு

கொழும்பிலுள்ள கல்வி அமைச்சின் தலைமையகத்துக்கு முன்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. அந்த சம்மேளனத்தின் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்ராலின் இதனை தெரிவித்துள்ளார்.



இலங்கையிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாமை பாரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், பாடசாலையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த காரணம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.



இதன்படி, 30 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக அதன் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை அதிபர்-ஆசிரியர்களின் தொடர் போராட்டமே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பதவியிழப்புக்கு அடிப்படையாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.